பெரியார் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர்
சர்ச்சையை எழுப்பிய யு.பி.எஸ்.சி. வினாத்தாள்!
சென்னை, மே 25 - ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற 24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 படி நிலைகளைக் கொண்டது. அந்த வகையில் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டுக்கான 979 பணியிடங்களுக்கு நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வின், பொது அறிவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 25) காலை 09:30 மணிக்குத் தொடங்கி 11:30 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில், பொது அறிவு தேர்வில் (டி) வரிசை தொகுப்பு வினாத்தாளின் 8 ஆவது கேள்வியில், ‘சுயமரியாதை இயக்கத்தின்’ நிறுவனர் யார்?’ (Who among the following was the founder of the ‘Self-Respect Movement?’) என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு விடையளிக்கும் வகையில் அ.) பெரியார் ஈ.வி.ராமசுவாமி நாயக்கர், ஆ) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், இ) பாஸ்கர்ராவ் ஜாதவ், ஈ) தினகர்ராவ் ஜவல்கர் என 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. பெரியாரின் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்டிருப்பது தேர்வர்கள் மத்தியில் சலசலப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கேள்வி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் தமிழக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “யுபிஎஸ்சி தேர்வு கேள்வியில் பெரியார் பெயருடன் சாதி பெயர் சேர்ப்பு, சாதி பெயரை குறிப்பிட்டது தவறு, அதை நான் ஏற்கவில்லை” என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் சாதியைக் குறிப்பிடக்கூடிய பழக்கத்தை முழுமையாக நடைமுறையில் இருந்தும் மக்கள் மனதிலிருந்து மாற்றியவர் பெரியார். ஆனால் அவருடைய பெயருக்குப் பின்னாலே சாதிப் பெயரைக் குறிப்பிட்டு கேள்வி கேட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுயமரியாதை இயக்கம் பெரியாரால் கடந்த 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தனது பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயரை நீக்கிவிட்டதாகப் பெரியார் கூறினார். இந்த சர்ச்சைகளுடன், ஒரு மசோதாவை ஆளுநர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதாவது, நீதிமன்றம் ஆளுநரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்று சர்ச்சையான கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.