குஜராத்தில் வெளிப்பட்ட மதம் கடந்த மனிதநேயம்
காந்தி நகர், நவ. 2 - குஜராத் மாநிலம் மோர்பி தொங்குபாலம் அறுந்த விபத்தில், 47 குழந்தைகள் உட்பட 142 பேர் பரிதாபமாக பலியாகினர். சுமார் 200 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் பலர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலம் அறுந்து, 350 பேர் மச்சூ ஆற்றில் விழுந்துள்ளனர். தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் செல்வதற்கு முன்பே, ஏராளமானோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒரு சில மணி நேரங்களிலேயே 97 பேர் செத்து மடிந்தனர். அவர்களின் உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில்தான், ஆற்றில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றி கரை சேர்ப்பதிலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதிலும் 2 இஸ்லாமியர்கள் பேருதவியாக இருந்தது தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று மோர்பியில் உள்ள மருத்துவமனையில் தனது மகளை பிரசவத்திற்காக சேர்த்திருந்தார் தவுபீக் பாய். அப்போது சிலர் உடல்களை ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போதுதான் தவுபீக் பாய்க்கு விபத்து குறித்து தெரிந்துள்ளது. இதனைக் கேள்விப்பட்டவுடன் தவுபீக் பாய் உடனடியாக ஆற்றை நோக்கி ஓடியுள்ளார். அங்கு விரைந்து செயல்பட்டு, சுமார் 35 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்திருக்கிறார். இதுதொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகம் அவரை பேட்டி கண்டபோது, “இதுபோன்ற துயரமான நேரங்களில் நமக்குத் தேவை சாதி-மதம் அல்ல. மனிதாபிமானம்தான்” என்று கூறியுள்ளார். தவுபீக் பாயைப் போலவே, ஹுசைன் பதான் என்ற மற்றொரு முஸ்லிம் இளைஞரும் மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளார். நீச்சல் வீரரான இவர், ஆற்றில் குதித்து தனது உயிரையும் பொருட்படுத்தாது 50 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்த தகவல்கள் சமூகவலைதளங்களில் தற்போது பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன. மோர்பி தொங்குபாலத்திற்கு வந்த பெரும்பாலானோர் ‘சாத் பூஜை’ எனப்படும் இந்துப் பண்டிகையைக் கொண்டாட வந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.