இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம்
முதலமைச்சர் பெருமிதம்
சென்னை, ஆகஸ்ட் 6 - இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை தமிழ்நாடு எட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் முதலமைச்சர் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு, தமிழ்நாட்டின் திமுக அரசு. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69 சதவிகித பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம். இப்போது அதையும் தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19 சதவிகிதம் என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு 2010-11ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது. இப்போது அவர்வழி திமுக ஆட்சி, இரண்டுமே கழக ஆட்சி. 2030-ஆஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும் என்றார்கள். இதே வேகத்தில் சென்றால் எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டு விட்டது” என்று தெரிவித்துள்ளார்.