tamilnadu

இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதரர்களாக வாழும் மாநிலம் தமிழ்நாடு

புதுக்கோட்டை, பிப்.5-  இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதரர்களாக வாழும் மாநிலம் தமிழ்நாடு என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.  புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி திமுகவுக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டது. அதேபோல், வரக்கூடிய 2026 பொதுத் தேர்தலிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. தமிழ்நாட்டில் எப்போதும் அண்ணன், தம்பிகளாக, சகோதரர்களாக இருந்து வருகின்றோம். திருப்பரங்குன்றத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது.  இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தான் தமிழ்நாடு. எங்களைப் பொருத்த வரைக்கும் நிச்சயம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும். அதற்கான முயற்சிகளை அரசு உரிய முறையில் எடுக்கும். இதைப் பெரிய விவ காரமாக்கி அதில் லாபம் அடைய வேண்டும் என்று நினைக்கும் தீய சக்திகளை ஒடுக்குவோம்.  பேரவையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்ததால் தமிழ்நாடு மக்கள் பாதிப்படையவில்லை. ஆளுநர் உரையை வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் மக்களுக்குள்ள அடிப்படை வசதிகளை இந்த அரசு செய்து தான் வருகிறது. ஆளுநர் தான் அவரது கடமையை செய்ய தவறி விட்டார்.  சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம், துணைவேந்தர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை தரும் என்று எதிர்பார்க்கிறோம்.  ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் ஆட்சி மன்றக் குழுவை அமைத்துள்ளோம். அந்த நிர்வாகம் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாடு என்ற மாநிலம் இந்தியாவில் இருக்கிறதா? என்ற சந்தேகம் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை பார்த்தால் தெரிய வருகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாட்டை மிக மிக புறக்கணித்து ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என்றார் ரகுபதி.