tamilnadu

img

ஆசிரிய பட்டதாரிகளை கொடுமைக்குள்ளாக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஸ்வயம் பாடத்திட்டம்

திண்டுக்கல், மே 10- ஆசிரியப் பட்டதாரிகள் சான்றிதழ் பெற  ஸ்வயம் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.  ஏற்கனவே மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்றால் நீட் தேர்வு எழுத வேண்டும்  என்றும், கலை அறிவியல் பாடத்தை எடுத்து படிக்க வேண்டும் என்றால் கூட தற்போது கியூட் என்ற நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்றும் பாஜக ஒன்றிய அரசு நாடு முழுவதும் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு தடைக் கற்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்வயம் என்ற பாடத்திட்டத்தில்  தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பட்டதாரி சான்றிதழ் பெற முடியும் என்ற நிலை உள்ளது. இந்தியாவில் உள்ள சில முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்த ஸ்வயம் கோர்ஸ்  நடத்துகின்றன. இந்த ஆன் லைன் பாடத்திட்ட த்தில் சேருவதற்கு எந்த கட்டணமும் இல்லை  என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரு கோர்சுக்கு ரூ.1000 வசூலிக்கப்படுவதாக கூறப்படு கிறது. ஆசிரியர் பயிற்சிக்கும் இந்த பாடத் திட்டத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்த நடைமுறை மாணவர்கள் மீது திணிக்கப்படுவதாக கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்கள் புகார் கூறுகிறார்கள்.

 தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்த பாடத்திட்டம் துணை வேந்தர்கள் மூலம் புகுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் நஞ்சப்பா கவுண்டர் கல்வியியல் கல்லூரியில் எம்.எட்  முதுகலை 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் ஜீவசங்கமித்ரன் கூறும் போது, நான் சென்னை காரப்பாக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்திற்கு கட்டுப்பட்ட திண்டுக்கல் நஞ்சப்பா கல்வியியல் கல்லூரியில் பயின்று  வருகிறேன். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு  ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள  புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் அமலாக்கமாட்டோம் என்று சட்டமன்றத் தில் உறுதியான கொள்கை முடிவெடுத்து ள்ளதாக அறிவித்தார்.

அரசின் கொள்கைக்கு மாறானது

ஆனால் திமுக அரசின் கொள்கைக்கு மாறாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக உயர் கல்வி  பட்டம் பெற வேண்டும் என்றால் என்.பி.டி.ஈ.எல். மற்றும் ஸ்வயம் பாடத்திட்டத்தில் 2 பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று மாணவ, மாணவியர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.  ஸ்வயம் பாடப்பிரிவில் ஒரு கோர்சுக்கு 12 வாரம் என்ற விகிதத்தில் 2 கோர்சுக்கு 24 வாரம் கட்டாயம் படிக்க வேண்டும். இதில் 24 வாரத்திற்கும் 24 அசைன்மெண்ட்டுகளை ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும். ஒரு  கோர்சுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எம்.எட். படிக்கும் மாணவ, மாணவியர்கள் 2 கோர்சும், பி.எட் படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஒரு கோர்சும் முடிக்க வேண்டும்.

பிறமொழியில் தேர்வு

கிராமப்புற ஏழை மாணவ, மாணவி யர்கள் ஆன் லைன் மூலம் இந்த தேர்வை எழுதுவது சிரமம். அதே போல் தமிழ் வழியில் கற்றவர்களுக்கு இந்த தேர்வை பிற மொழியில் எழுத வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் ஸ்வயம் தேர்வு எழுதும் மையம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி என 6 பெருநகரங்களில் தான் உள்ளன. தமிழ்நாடு அரசின் கல்விக்கொள்கைக்கு மாறாக ஒன்றிய பாஜக அரசின் ஸ்வயம் கோர்சு முடித்தால் தான் பி.எட்., எம்.எட். கல்வியில் மாணவ, மாணவயர்களுக்கு சான்றிதழ் கிடைக்கும் என்றால் எப்படி படிக்க முடியும்.  தமிழக அரசுக்கு இது தெரியுமா? அல்லது தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் பல்கலைக்கழக துணை வேந்தர்களே அமலாக்குகிறார்களா என்பதை அரசு ஆய்வு செய்து அது உண்மை என்ற நிலை யில் ஸ்வயம் தேர்வை ரத்து செய்ய அரசு முன்வரவேண்டும். இது புதிய கல்விக் கொள்கை குறித்து நமது  சட்டமன்ற முடிவு களுக்கு விரோதமானது என ஜீவசங்க மித்ரன் தெரிவித்தார்.  இதே போல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயின்ற மொழியியல் மாணவர் சமணா அரிய பிரம்மா (எ) செங்கதிர் கூறும் போது, நான் 2019ஆம் கல்வி ஆண்டில் மொழியியலை பாடமாக எடுத்து படித்தேன். இந்த பல்கலைக்கழ கத்தில் ஸ்வயம் பாடத்திட்டம் கட்டாய பாடத்திட்டமாக உள்ளது. ஸ்வயம் ஆன் லைன் பாடத்திட்டம் படிக்க பணம் ஏதும் கட்ட வேண்டியதில்லை என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு கோர்சுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த பணத்தை திருப்பி தந்துவிடுவ தாக கூறுகிறார்கள். ஆனால் பாடத்திட்ட இப்பிரிவில் ஆன்லைன் தேர்வு எழுதும் போது 86 விழுக்காடு மதிப்பெண் பெற்றால் தான்  பணம் திருப்பித் தருவதாகக் கூறப்படு கிறது. 10 பேர் எழுதினால் அதில் ஒருவருக்குத் தான் அந்தப் பணம் திரும்பக் கிடைக்கும். இந்த மையத்தில் பணியாற்றுபவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. இந்தியில் தான் பேசுகிறார்கள். இதனால் தமிழை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் பெரும் சிரமப்படுகிறார்கள்.

சான்றிதழ் பெற முடியாநிலை

கோவையில் உள்ள ஸ்வயம் மையம் கோவைக்கு வெளியே 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் மாணவ, மாணவியர்கள் இந்த மையத்திற்கு சென்று திரும்புவதில் மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. தேர்வு எழுதும் போது பல நேரம் இணையதளம் வேலை செய்வ தில்லை. இதனால் கூட மாணவ, மாணவி யர்கள் தேர்ச்சி பெற இயலாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதன் காரணமாக எம்.எட், பி.எட், சான்றிதழ் பெற இயலாமல் போய்விடுகிறது.  ஸ்வயம் துறையின் தலைவர்கள் தினசரி மாணவர்களிடம் தொந்தரவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். மேலும் இந்த கோர்சில் தேர்ச்சி பெற்றால் கூட சான்றிதழ் உடனடியாக தருவதில்லை. எப்போது கிடைக்கும் என்றும் உறுதியாக சொல்வதில்லை. இதனால் எம்.எட் , பி.எட். சான்றிதழ் பெற காலதாமதமாகிறது. நான் பயின்ற கல்வி ஆண்டில் தமிழ்த்துறை மாணவ, மாணவியர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெற முடியவில்லை. இப்போது வரை அதே நிலை தான். ஸ்வயம்  பாடத்திட்டம் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிரு தம் ஆகிய மொழிகளில் தான் அச்சிடப்பட்டு உள்ளன. நமது தமிழ் கல்வியியல் மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தில் எப்படி தேர்வு எழுத முடியும்.

 தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்து பெற்றது. ஆனால் ஒன்றிய அரசு ஸ்வயம் பாடத்திட்டத்தில் மாநில மொழிகளை அங்கீ கரிக்காததால் செம்மொழியான தமிழில்  கேள்வித்தாள் இல்லை. கடந்த ஆண்டு  துணைவேந்தர் தலைமையில் பல்கலைக் கழக வளாகத்தில் ஸ்வயம் தேர்வை மாண வர்கள் எழுதினார்கள். பொதுவாக நாம் விருப்பப்பட்டு எடுக்கும் பாடமுறையின் மொழியில் ஸ்வயம் இருந்தால் தான் அந்த  தேர்வை எழுதுவதில் ஒரு திருப்தி இருக்கும்.  ஆனால் அந்நிய மொழியில் எழுதும் போது தேர்வு எழுதிவிட்டு வரும் போது நாம் தேர்ச்சி பெறுவோமா? மாட்டோமா என்ற முடிவுக்கு வர முடியவில்லை.  பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கே ஸ்வயம் பாடத்திட்டம் குறித்து முழுமையான ஞானம் இல்லை. அப்படி இருக்கும் போது மாணவர்களுக்கு எப்படி இருக்கும். இந்த பாடத்திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய முன்வரவேண்டும். இல்லை என்றால் துறை வாரியான சான்றிதழ் கிடைக்காமல் படிக்கும்  காலம் வீணடிக்கப்பட்டதாக மாணவ, மாண வியர்களிடையே எண்ணம் வருமானால் தற்கொலை செய்து கொள்ளவும் கூடும் என்று சமணா அரியபிரம்மா தெரிவித்தார். 

இலமு, திண்டுக்கல்