பாலர் பூங்கா சார்பில் கோடை அறிவியல் திருவிழா
புதுக்கோட்டை, மே 29- பாலர் பூங்கா அமைப்பின் சார்பில், கோடை அறிவியல் திருவிழா வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. திருவிழாவிற்கு, பாலர் பூங்காவின் மாவட்ட அமைப்பாளர் டி.காயத்திரி தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மை வளர்வதன் மூலமாக சமூக ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பயன்படும். வகுப்பறையை தாண்டி கற்றுக் கொள்ளக் கூடியதாக கல்வி இருக்க வேண்டும். குழந்தைகளை சுயமாக சிந்திப்பவர்களாகவும், கேள்வி கேட்பவர்களாகவும் மாற்ற வேண்டும் என்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் அ.மணவாளன், கருத்தாளர்கள் மலர்விழி, அனாமிகா பங்கேற்று குழந்தைகளை உற்சாகமூட்டினர். ஜனார்த்தனன் நிறைவுரையாற்றினார். இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு அறிவியல் விளையாட்டுகள் கணக்கும் இனிக்கும் எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா? தந்திரமா? ஓரிகாமி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டது. பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக பாலர் பூங்கா பொறுப்பாளர் நித்திஷ் வரவேற்க, நிரஞ்சனா நன்றி கூறினார். இந்நிகழ்வில், 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.