tamilnadu

வெற்றியா, தோல்வியா என்பதல்ல... நீதியா, அநீதியா என்பதே கேள்வி

வேறு எந்த பொதுத் துறை பங்கு விற்பனையும் சந்திக்காத அளவிற்கு எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு பரவலான எதிர்ப்பு உள்ளது. அதையும் மீறி மோடி அரசாங்கம் பங்கு விற்பனையை செய்தால் அதற்கு பேர் வெற்றி அல்ல. அது ஜனநாயக விரோதம். அரசு ஏற்கெனவே மூன்று தார்மீக தோல்விகளை சந்தித்து விட்டது.  ஒன்று, எல்ஐசி பங்கு விற்பனைக்கான சட்ட திருத்தத்தை தனி மசோதா ஆக கொண்டு வந்தால் 2008 இல் நடந்தது போல அதன் மீது கவனக் குவிப்பும், ஆழமான விவாதம் நிகழ்ந்து திரும்பப் பெற வேண்டி வரலாம் என்ற அச்சத்தால் பட்ஜெட் உடன் இணைந்த நிதி மசோதாவுக்குள் சொருகி அரசு நிறைவேற்றியது முதல் தார்மீக தோல்வி.  இரண்டாவது, வழக்கமாக பங்கு விற்பனைக்கு சொல்கிற எந்த காரணத்தையும் எல்.ஐ.சி நோக்கி முன் வைக்க முடியவில்லை என்பது. நட்டம், திறமையின்மை, சேவை பரவல் என்ற எதையும் முன் வைக்க முடியவில்லை. அரசு வைத்த புதிய வாதங்கள் “செபியின் கூடுதல் கண்காணிப்பு,” “மக்களுக்கு விற்பனை” என்ற இரண்டு முக மூடிகளும் கூட கிழிந்து தொங்கி விட்டன. அரசாங்கத்தால் கருத்துப் போராட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை.  மூன்றாவது, 1994 இல் மல்ஹோத்ரா குழு அறிக்கை 50 சதவீத பங்கு விற்பனை என்று பேசியது.

28 ஆண்டுகளுக்கு பிறகும் 10 % என்று செய்திகளைக் கசிய விட்டு அதுவும் இயலாமல் 5 சதவீதம் என ஆறுதல் கொள்ள வேண்டி வந்திருப்பது.  ஆனால் எல்.ஐ.சி பங்கு விற்பனையை எதிர்க்கிற இயக்கம் மூன்று வெற்றிகளை ஈட்டி இருக்கிறது  ஒன்று, “எப்போதும் (At all Times) அரசு கைகளில் எல்.ஐ.சி யின் 51% பங்குகள் இருக்கும் என்ற திருத்த மசோதா பிரிவு 5 இல் சட்டப் பூர்வமான உறுதி மொழி இடம் பெற்று இருப்பது. இதனால் என்றும் எல்.ஐ.சி அரசு நிறுவனமாக  நீடிக்கும் என்று அரசு சொல்ல வேண்டி வந்துள்ளது. வார்த்தைகளின் உயிர் போராட்டங்களில்தான் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனாலும் இத்தகைய உறுதி மொழியை அரசு தர வேண்டி வந்துள்ளது.  இரண்டாவது, எல்ஐசி பாலிசிகளுக்குள்ள அரசு உத்தரவாதம் (Sovereign Guarantee) பறிக்கப்படாது என்ற உறுதி மொழி. 2008 இல் பங்கு விற்பனை முன் மொழியப்பட்ட போது அரசு உத்தரவாதம் சேர்த்து பறிக்கப்படும் என்றே முன் மொழியப்பட்டது. இப்போது அவ்வாறு அரசாங்கம் சொல்லவில்லை.  மூன்றாவது, அரசின் இவ்வளவு பிடிவாதங்களுக்கு பிறகும் களத்தில் பங்கு விற்பனைக்கு எதிரான வெப்பம் தக்க வைக்கப்பட்டிருக்கிறது. அரசின் முடிவுகளுக்கு போடப்பட்டுள்ள  வேகத் தடைகள் எல்லாம் எதிர் காலப் போராட்டங்களுக்கு வாசல்களாக உள்ளன. வெற்றியா தோல்வியா என்பதல்ல போராட்ட இயக்கத்தின் முன்புள்ள கேள்வி. நீதியா அநீதியா என்பதே கேள்வி. இந்த தெளிவே இவ்வளவு சோதனைகளுக்கு மத்தியிலும் உறுதியாக நிற்க வைத்துள்ளது.

- க.சுவாமிநாதன்