tamilnadu

img

சுங்கடி சேலை மீதான 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட நிதியமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி நேரில் வலியுறுத்தல்.

சுங்கடி சேலைகளுக்கு ஜனவரி முதல் 12 சதவிகித GST வரி விதிக்கப்பட உள்ளது. இவ்வரிவிதிப்பை கைவிட வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் சு.வெங்கடேசன் எம்.பி நேரில் வலியுறுத்தி உள்ளார். 

“சுங்கடி சாரீஸ்” மதுரையின் அடையாளங்களில் ஒன்று. மொழிச் சிறுபான்மையினராக உள்ள சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த மக்கள் இத் தொழிலில் பராம்பரியமாக ஈடுபட்டு வருகிறார்கள். கைகட்டு வடிவமைப்பு, மெழுகு பிரிண்ட் வடிவமைப்பு, ஸ்கீரின் பிரிண்ட் வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சலவை செய்தல் போன்ற பணிகள் இத்தொழிலில் உள்ளடக்கம். 10,000 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன.

விவசாய கூலிப்பெண்கள், மீனவப்பெண்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் அணியும் உடையான இச்சுங்குடி சாரீஸ் தயாரிக்கும் தொழில் 1995-ல் குடிசைத் தொழிலாக அங்கிகரிக்கபட்டுள்ளது. சிறப்பான, நேர்த்தியான இச்சேலைகளுக்கு “புவிசார் குறியீடும்” 2005-ல் வழங்கி ஒன்றிய அரசு கெளரவித்துள்ளது.

இத்தகு பெருமை வாய்ந்த சுங்குடி சாரீஸ் தயாரிக்கும் தொழில் ஒன்றிய அரசின் வரி விதிப்புக் கொள்கையால் பாதிப்பிற்கு உள்ளாக உள்ளது.

முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டிய இத்தொழிலுக்கு 2017-ம் ஆண்டு 5% வரி விதித்தது ஒன்றிய அரசு. தற்பொழுது 12% ஆக உயர்த்தி ஜனவரி 1ம் தேதி முதல் அமலாகும் என்று ஆணை பிறப்பித்துள்ளது ஒன்றிய அரசு.

எளிய மக்களை பாதிக்கும் இவ்வரி உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் என ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி நேரில் வலியுத்தி உள்ளார். 

 

;