1957ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தது. 65 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கேரள சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அரசாங்கம் அமைக்க அனுமதிக்குமாறு கோரினேன். இருந்த போதிலும் அப்போது ஆளுநராக இருந்தவர் என்னுடைய வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டார். நான் சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட சுயேட்சை எம்.எல்.ஏக்களைத் தனியாக சந்தித்துப் பேசினார். எங்கள் கட்சி சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் எங்களுக்கு உறுதியாக ஆதரவளிப்பதை தெரிந்து கொண்ட பின்னரே ஆளுநர் என்னுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். என்னை அரசாங்கம் அமைப்பதற்கு அழைத்தார். என்னை அரசாங்கம் அமைக்க அழைத்த பின்னரும் கூட ஆளுநர், அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படையில் ஆங்கிலோ - இந்தியப் பிரதிநிதியின் இடத்திற்கு ஒருவரை நியமிப்பதில் வழக்கத்திற்கு மாறான முறையைப் பின்பற்றினார். சட்டமன்றத்திறகு தேர்தல் முடிந்து, புதிய அமைச்சரவை அமைக்கப்படும் போது சட்டமன்ற உறுப்பினர்களை நியமிப்பது சம்பந்தமாக ஆளுநர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது; புதிய அமைச்சரவை அமைந்த பிறகு அதனுடைய ஆலோசனையின் பேரில் தான் ஆளுநர் புதிய உறுப்பினரை நியமிக்க வேண்டுமென்று கூறி ஆளுநரின் நடவடிக்கைக்கு ஆட்சேபணை தெரிவித்தேன். இருந்த போதிலும் ஆளுநர், தான் விரும்பிய நபரை நியமித்தார். அவரால் நியமிக்கப்பட்டவர் ஒரு காங்கிரஸ்காரர்.
ஆளுநர் காட்டிய ‘நன்றிக் கடன்!’
அப்போது நடந்த தேர்தலில் ஐந்து சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 65 இடங்களில் எங்கள் கட்சி வெற்றி பெற்றது. சுயேட்சை உறுப்பினர்கள் அனைவரும் எங்களுடைய ஆதரவுடனேயே போட்டியிட்டனர். அதேநேரத்தில் மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து 61 இடங்களில் தான் வெற்றி பெற்றன. ஆளுநர் ஒரு காங்கிரஸ்காரரை ஆங்கிலோ - இந்தியப் பிரதிநிதியாக நியமித்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 62ஆக உயர்ந்தது. மாநில ஆளுநர் இந்தவகையில் தன்னுடைய அதிகாரத்தை, தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ஒரு கட்சியின் நலனுக்காக பயன்படுத்தியுள்ளார். முன்னதாக ஐந்து சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதன் நோக்கம் சட்டமன்றக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவை உருவாக்குவதுதான். இது தோல்வியடைந்தது. அது வேறு விஷயம். இருந்த போதிலும் இதிலுள்ள உண்மை என்னவென்றால் ஆளுநர் தன்னுடைய அதிகாரத்தை, தான் அதிகாரத்திற்கு வர உதவிய கட்சிக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காகப் பயன்படுத்தியுள்ளார் என்பது தான். மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும்பான்மை கட்சியாக இருந்து கேரளம் மட்டும் விதிவிலக்காக இருந்தபோது இது கேரளத்தில் நடந்தது. ஆனால் இன்று எந்த ஒரு தனிக் கட்சியும் மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மை பெறமுடியாத நிலை இருக்கிறது. தற்போது மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் கட்சி பல மாநிலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. யதார்த்த நிலைமையில் அடுத்த தேர்தலுக்கு பிறகும் கூட இது தொடரலாம் என்று தெரிகிறது. இத்தகைய சூழ்நிலையில் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவர்களை ஆளுநர்களாக நியமித்து அவர்களுடைய அதிகாரத்தை, தோற்கடிக்கப்பட்ட கட்சியை ஆளுங்கட்சியாக மாற்றுவதற்கு பயன்படுத்துகிறார்கள்.
நாட்டில் மிகவும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை நிலவும் இந்தக் காலத்தில் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளுங்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இத்தகைய தன்னிச்சைப் போக்கில் பயன்படுத்தப்படும் கொடுமையான அதிகாரம் ஒன்றிய அரசு நிர்வாகத்திடம் இருப்பது கேரளத்தில் எங்கள் கட்சிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது போல் பயன்படுத்தப்படலாம். கேரள அரசாங்கத்திற்கு தலைமை தாங்க எனக்குக் கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் கேரள மாநில விவகாரங்களில் ஒன்றிய அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் தலையிட்ட இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறேன். என்னுடைய முதல் பதவிக் காலத்தின் போது (1957-59) இரண்டு சட்ட நடவடிக்கைகளை எடுத்ததில் நியாயமாகப் பெருமைப்படுகிறேன். நில உறவுகள் மசோதா, கல்வி மசோதா என்ற இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த இரண்டு மசோதாக்களும் பெருமளவில் ஒன்றிய அரசாங்கம், மற்றும் காங்கிரஸ் கட்சி வரையறுத்த வழியிலேயே நிறைவேற்றப்பட்டன. தங்களுடைய தலைவர்கள் அறிவித்த கொள்கைகளை அமல்படுத்த காங்கிரஸ் அல்லாத கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டியிருக்கிறதே என்று உண்மையில் பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் வருத்தப்பட்டார்கள். இந்த மசோதாக்களை சுயநலசக்திகளான பழைய நிலப்பிரபுக்களும் நவீன நில உடைமையாளர்களும் வர்த்தக அடிப்படையில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கல்வி நிறுவனங்களை நடத்தும் நிர்வாகங்களுடன் சேர்ந்து கொண்டு எதிர்த்தது இயற்கையே. மத்தியிலுள்ள ஆளுங்கட்சியின் நேரடித் தலைமையின் (அந்தக்கட்சி மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது) கீழ் மாநில அரசாங்கத்திற்கு எதிராக வெளிப்படையான அரசியல் சட்ட விரோத கிளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள்.
இங்கும் கூட என்னுடைய அரசாங்கம் கடைப்பிடித்த கொள்கை சரியா தவறா என்று கேள்வி எழுப்பவில்லை. அந்தக் கொள்கையை மத்தியிலுள்ள ஆளுங்கட்சி உள்ளிட்ட எந்தக் கட்சியும் எதிர்க்கலாம்; ஆனால் தங்களுடைய லட்சியம், கேரளத்தில் நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைப்பது தான் என்று கூறி ஒரு போராட்டத்திற்கு (விமோசன சமரம்) ஏற்பாடு செய்தவர்களுக்கு மத்தியிலுள்ள ஆளுங்கட்சி தன்னுடைய அங்கீகார முத்திரையைக் குத்தியது சரியா? 1967-69 ஆம் ஆண்டு மீண்டும் நான் கேரள அரசாங்கத்திற்கு தலைமை தாங்கியபோது அரசியல் சட்டத்தின் தன்மை பற்றி ஒரு கடுமையான வாக்குவாதம் எழுந்தது. மத்திய அரசாங்க ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யவிருந்தார்கள். இந்த வேலை நிறுத்தம் சம்பந்தமாக கடுமையான நிலை எடுப்பது என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. வேலை நிறுத்தத்தை தூண்டுபவர்கள் அனைவரையும் விசாரணையில்லாமல் சிறையில் அடைக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டது. என்னுடைய அரசாங்கம் இந்த நடவடிக்கை சரியானது என்று கருதவில்லை.
நாங்கள் யாரையும் கைது செய்து சிறையிலடைக்க மறுத்துவிட்டோம். அத்துடன் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள நிலையைச் சமாளிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் அளிக்க முன் வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையையும் பயன்படுத்த மறுத்து விட்டோம். ஒன்றிய அரசாங்கம் கடைப்பிடிக்கும் கடுமையான நிலையை நாங்கள் ஏற்றுக் கொள்ளாததால் மட்டும் இந்த நிலையை எடுக்கவில்லை; மாறாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையைப் பயன்படுத்தாமலும், விசாரணையின்றி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் இறங்காமலும் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமையைப் பாதுகாத்துவிடலாம் என்று உறுதியாக நம்பினோம். அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த ஒய்.பி. சவாண் எனக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை தந்தி அனுப்பியிருந்தார். அதில் ஒன்றிய அரசாங்கத்தின் உத்தரவுகளை அமல்படுத்தாத்து சம்பந்தமாக அரசியல் சட்டத்திலுள்ள ஷரத்துக்கள் உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்றிருந்தது. இதற்கு பதிலாக நான் மாநிலத்திற்கும் ஒன்றிய அரசிற்கும் இடையேயுள்ள தாவாவைத் தீர்க்க அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை அமைக்க வேண்டும் என்று கோரினேன். மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை அமைக்க வேண்டுமென்ற என்னுடைய கோரிக்கையை நிராகரித்த அதே நேரத்தில் ஒன்றிய அரசு இந்தப் பிரச்சனையைத் தொடரவில்லை. ஆகவே ஒன்றிய அரசுடனான எங்களுடைய உறவில் நெருக்கடி ஏற்படவில்லை. ஆனால் இங்கு இன்னும் எழுந்து வரக்கூடிய பிரச்சனை என்னவென்றால் மாநில அரசாங்கத்தின் அதிகாரப் பட்டியலில் உள்ள சட்டம் - ஒழுங்கு போன்ற ஒரு பிரச்சனையில் ஒரு மாநில அரசாங்கத்திடம் ஒன்றிய அரசு இத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது சரியா என்பதே!
எனது ஆலோசனைகள்
எனக்குக் கிடைத்துள்ள அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் ஆலோசனைகளைக் கூறுகிறேன்:
1. மாநில அரசியல் சட்ட அமைப்பில் ஆளுநர்கள் அதிகாரத்தை ஐந்தாவது சக்கரமாக பயன்படுத்தும் அனைத்து சாத்தியப்பாடுகளையும் தவிர்க்கும் வகையில் ஆளுநர்களுடைய அதிகாரங்களையும், செயல்பாடுகளையும் (அந்தப் பதவி தொடர்ந்து இருந்தால்) மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
2. மாநில அதிகாரப் பட்டியலில் உள்ள சட்ட, நிர்வாகப் பணிகளை ஆற்றுவதற்கு மாநில சட்டத்துறையையும், மாநில நிர்வாகத்துறையையும் மேலான அமைப்பாக ஆக்க வேண்டும்.
சில நண்பர்கள் கூறுவது போன்று இந்த யோசனைகள் ஒன்றிய அரசை பலவீனப்படுத்தி விடாது. இது ஒன்றிய அதிகாரப் பட்டியலிலும், மாநில அதிகாரப் பட்டியலிலும் உள்ள துறைகளின் சட்ட, நிர்வாக அதிகாரங்களில் ஒன்றிய அரசும், மாநிலங்களும் மேலான இடத்தைப் பெறுவதற்கான கூட்டாட்சித் தத்துவத்தின் வலுவான அடிப்படையை ஏற்படுத்தும். ஒன்றிய அரசாங்கம் அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தை மீறி பெறப்பட்டுள்ள அதிகாரங்களைத்தான் இழக்கும். மேலே விவரிக்கப்பட்ட முறையில் என்னுடைய இரண்டு அரசாங்கங்களையும் நடத்துவதற்கு ஒன்றிய அரசிற்கு வசதி தரும் அந்த அதிகாரங்களை பறித்துவிட்டால் அது பலவீனப்பட்டுவிடும் என்ற கற்பனையான வாதத்தில் இறங்க வேண்டாம். அரசியல் அமைப்புச் சட்டத்தில் இதுபோன்ற ஷரத்துகள் தொடர்ந்து நீடிக்கும் வரை என்னுடைய அரசாங்கங்களுக்கு நிகழ்ந்தது, மீண்டும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?