tamilnadu

img

பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை

பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி  பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை 

தஞ்சாவூர், மே29-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், பெற்றோர்கள் இருவரையும் இழந்து, கல்வி பயிலும் மாணவர்களின் பொருளாதார மற்றும் குடும்பசூழல் குறித்து கள ஆய்வு செய்தும், கண்காணித்தும் அறிக்கை வழங்க அமைக்கப்பட்ட குழுவினருக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில், பெற்றோர் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த பள்ளி செல்லும் குழந்தைகளின் விபரங்களை சேகரிக்க ஆணையிடப்பட்டது. தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம், திருவிடைமருதூர், தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம் மற்றும் பேராவூரணி ஆகிய பகுதிகளில் பள்ளி செல்லும் மாணாக்கர்களிடையே எடுக்கப்பட்ட ஆய்வில், பெற்றோரை இழந்தோர் 594 பேர், தாயை இழந்தோர் 2,417 பேர், தந்தையை இழந்து வாடுவோர் 9,342 பேர் என மொத்தம், 12,353 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் இடைநிற்றல் இன்றி படிப்பைத் தொடர, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து, சம்மந்தப்பட்ட குழுவினருடன் ஆலோசிக்கப்பட்டது என்றார்.  இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சௌ. சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.