tamilnadu

img

பாலின சமத்துவம் ஓங்கட்டும்! - பி.சுகந்தி

பொள்ளாச்சியின் கதறல் இன்னமும் செவிகளில் மோதுகிறது. வெளி மாநிலத்திலிருந்து வங்கிப் பணிக்காக கும்பகோணத்திற்கு வந்த இளம் பெண் கடத்தப்பட்டு கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார் என்பது எவ்வளவு கொடூரமானது.அது அந்த சகோதரியை மட்டுமா சிதைத்தது?  தமிழ்நாடு தன்னை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையையும் தான். கோவையில் துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்ட துடியலூர் சிறுமி நம் கண் முன்னால் காட்சி தருகிறார். கல்வி நிலையங்களில்  தற்கொலைகள் செய்து கொள்கிற மாணவிகள் எத்தனை எத்தனை பேர். இக்கொடுமைகளில் சிலவற்றைத் தான் ஊடகங்கள் வழியாக அறிய முடிகிறது.இருட்டிலேயே புதைந்து போன வன்முறைகள் ஏராளம் ஏராளம். தொடர்ந்து அதிகரித்து வருகிற வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாத்திடுவோம்; வன்முறையை வேரறுப்போம்; பெண்ணுரிமை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் செப்டம்பர் 29 ,30 அக்டோபர் 1 ஆகிய மூன்று நாட்கள் கடலூர் மண்ணில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

1973 இல் துவங்கப்பட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தனது 50 வது ஆண்டை நிறைவு செய்ய இருக்கிறது. தேச விடுதலைப் போராட்டக் காலத்தில் துவங்கப்பட்ட இயக்கம் என்பதால் அமைப்பின் அன்றைய தலைவர்கள் விடுதலை வேள்வியில் தங்களை முழுமையாக கரைத்துக் கொண்டனர்.  கே.பி.ஜானகி அம்மா,பாப்பா உமாநாத் அம்மா, ஷாஜாதி கோவிந்தராஜன் என விடுதலைப் போராட்ட வீராங்கனைகள் உருவாக்கிய அமைப்பு ஜனநாயக மாதர் சங்கம் . சுமார் நூறு பெண்களுடன் துவங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று தமிழகத்தில் 7.5 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வலிமைமிக்க அமைப்பாக வளர்ந்துள்ளது. அடிமை விலங்கை அடித்து நொறுக்கி புதுமைகள் செய்யப் புறப்படுவோம் என தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் கடலூரில் சங்கமிக்கிறார்கள். ஜனநாயக மாதர் சங்கத்தின் கொள்கைகளை இந்த நிலமெங்கும் விதைத்து விடைபெற்றிருக்கிற எம் தலைவர்களின் தியாகச் சுடர்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வோடு மாநாடு துவங்குகிறது. நாங்கள் கடலூரில் கூடுகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரைத் துடைக்க கூடுகிறோம்.

கல்வி நிலையங்களில் படிப்பதற்கு செல்லும் மகள்களுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளதா? அதோடு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பெண் கல்வியை பல நூறு ஆண்டு காலம் பின்னுக்கு இழுத்துச் செல்கின்ற பாஜக அரசும் பாதகம் செய்கிறது. பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை தாங்களே தேர்வு செய்தால்,அதில் சாதி மாறுபாடு இருந்தால் படுகொலை செய்யப்படும் சாதி ஆதிக்கமும் ஆணவமும் தொடர்கிறது. உலகமய சூழல் பெண்ணின் உடலை ஒரு நுகர் பொருளாக ஒரு பாலியல் பொருளாக பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஒரு பிளேடுக்கும் புண்ணாக்குக்கும் கூட பெண்களை விளம்பரப் பொருளாக்குகிறது. சமூகம் அணிந்திருக்கும் உலகமயம் என்ற கண்ணாடி வழியாக அவள் ஒரு நுகர்வுப் பொருளாக மட்டுமே தெரிகிறாள். பெண்ணிற்கு காதலிப்பதற்கும், காதலை மறுப்பதற்கு உரிமை இல்லாத நிலை உருவாகிறது. தலைவாரி பூச்சூடி அழகு பார்த்து அன்பு முத்தம் கொடுத்து பள்ளிக்கு அனுப்பப்படும் தேவதைகள் கூட பள்ளிகளில் பாலியல் ரீதியாக கொடுமைக்குள் தள்ளப்படுகிறார்கள். படித்து வளர்ந்து வருமானம் ஈட்ட வேலைக்கு போனால் அங்கும் பாலியல் வன்கொடுமைகள். பெண்ணை தொழிலாளியாக பார்க்காமல்  பண்டமாகவே பார்க்கும் ஆணாதிக்க பார்வை பெண்களை துரத்திக் கொண்டே இருக்கிறது.  தமிழகத்தில் தொடரும் இத்தகைய வன்முறையை வேரறுக்க 2019 நவம்பர் மாதம் ‘போதையற்ற தமிழகம்’  புதுச்சேரி; வன்முறையற்ற தமிழகம்; புதுச்சேரி’ என்ற கோஷத்தை முன்வைத்து தமிழகத்தின் இருமுனைகளில் இருந்து   ஜனநாயக மாதர் சங்கம்  சென்னை நோக்கி  400 கிலோமீட்டர் நடைபயணம் நடத்தியது.

வன்முறையால் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் வீதிக்கு வந்து, தன் மீது ஏவப்பட்ட வன்முறைக்கு எதிராக போராடிய ஏராளமான போராளிகள் அந்த நடை பயணத்தில் கலந்து கொண்டனர். போதை பழக்கவழக்கத்தால் இளம் வயதிலேயே தன் கணவனை இழந்த ஏராளமான இளம் பெண்கள் அந்த நடை பயணத்திலே கலந்துகொண்டனர். இத்தகைய கொடுமைகளுக்கு தீர்வுகளை முன்வைத்து மாதர் சங்கம் அரசு அதிகாரிகளை சந்திக்க சென்ற போது நடை பயணம் மேற்கொண்ட பெண்களை காவல்துறை தாக்கி கைது செய்தது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் பொற்காலம் என்று சொல்லிக் கொள்ளும் இக்காலகட்டத்தில் பெண்கள் மீது வலைதள வன்முறைகள் அதிக அளவில் ஏவப்படுகின்றன.கட்டுப்பாடற்ற இணையவெளியும் அதில் திட்டமிட்டு கொட்டிக் கிடக்கிற பாலியல் காணொலிகளும் மனித மனங்களில் வக்கிரத்தை தூண்டி விடுகின்றன. வேலை இழப்புகளால் தன்  வருமானத்தை இழந்த ஏராளமான குடும்பங்கள் கந்துவட்டி கடன் வலைக்குள் சிக்கித் தவிக்கின்றன. வேலை இழப்பின் காரணமாக குடும்பம் குடும்பமாக தற்கொலைக்குத் தள்ளப்படும் அவல நிலை அதிகரிக்கிறது. இக்காலகட்டத்தில் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் சிறு கடன்கள் வழங்குவதை நிறுத்திக் கொண்டது. அக்கடன்களை நுண் நிதி நிறுவனங்கள் மூலம் வழங்குவதால் அதிக அளவில் வட்டிக்கு வாங்கி கடனுக்குள் மூழ்கி கிடக்கின்றன குடும்பங்கள்.

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. தங்களிடம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வட்டியை வசூலித்துக் கொள்ளலாம்; வேலை செய்யும் இடத்தில் சென்று வட்டி வசூலிக்கலாம் என்ற வழிகாட்டுதல் கடன் பெற்ற பெண்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்குகின்றது. கடந்த காலத்தில் ஆந்திராவில் நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று மீண்டும் செலுத்த முடியாமல் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ரிசர்வ் வங்கியின் இத்தகைய உத்தரவால் எதிர்காலத்தில் நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் கொத்துக்கொத்தாக தற்கொலைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் மேலும் மேலும் அதிகரித்து வரும் இக்காலத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்த எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அவை முறையாக அமலாக்கப்படுவதில்லை. நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தனி நீதிமன்றங்கள் பரவலாக்கப்பட வேண்டும். பள்ளி பாடத்திட்டங்களில் பாலின சமத்துவ கல்வி போதிக்கப்பட வேண்டும். ஆண் குழந்தைகள் வளர்ப்பிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். குடும்பத்திலிருந்து ஜனநாயகம் துவங்க வேண்டும். ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனி சட்டம் வேண்டும். அனைத்து அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பாலின சமத்துவக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.இவற்றை முன்வைத்து  மாநாடு விவாதிக்க உள்ளது.