tamilnadu

img

நாங்குநேரி மாணவர் சின்னதுரைக்கு சிறப்பு சிகிச்சை; அரசு வேலை வழங்க ஏற்பாடு

அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தகவல்

திருநெல்வேலி,ஆக.13- நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வெறியுடன் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டி தாக்கப்பட்ட மாணவர் சின்னதுறையை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.  பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது .  மகனுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என மாணவரின் தாயார் கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த மாணவன் 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  காயமடைந்த இருவரும் குணமடைந்ததும் அவர்களை பாதுகாப்பாக படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். அவர்களுக்கு தேவையான கல்வியை தொடர அரசு துணை நிற்கும் என்று  தெரிவித்தார்.

கிருஷ்ணன் குடும்பத்திற்கு நிவாரணம்

சின்னதுரை தாக்கப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்ட அவரது தாத்தா கிருஷ்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு வந்திருந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மக்களவை உறுப்பினர் சா.ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் ஆகியோர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை  கிருஷ்ணன்  குடும்பத்தினரிடம் அமைச்சர் கயல்விழி வழங்கினார்.

பட்டியலின ஆணைய  உறுப்பினர் ஆய்வு

இதற்கிடையில்  நாங்குநேரியில் பட்டியலின ஆணைய உறுப்பினர் ரகுபதி ஞாயிறன்று ஆய்வு நடத்தினார். சின்னத்துரையின் வீட்டை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து சின்னதுரையின் சக மாணவர்கள் மூர்த்தி, சிவா ஆகியோரை அழைத்து விசாரித்தார். பெண்களிடமும் விசாரணை நடத்திய அவர் பின்னர் சின்னதுரை படிக்கும் வள்ளியூர் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றார். பட்டியலின ஆணையர் வருகை குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய சின்னதுறையின் உறவினர் தளவாய் மணி, “பட்டியலின ஆணையருக்கு சின்னதுரையின் வீட்டை நான் தான் திறந்துகாட்டினேன். சின்னதுரை வெட்டப்பட்ட இடத்தை அவர் பார்வையிட்டார். பின்னர் சக மாணவர்கள் மூர்த்தி, சிவா ஆகியோரை அழைத்துப் பேசினார். அப்போது, பிரச்சனைகள் இருப்பது உங்களுக்கு ஏதும் தெரியாத எனக் கேட்டார். அப்போது சிவா ஆணைய உறுப்பினரிடம், “என்னிடமும் துவேஷத்துடன் நடந்து கொண்டனர். நான், என் அப்பாவிடம் கூறியதை அடுத்து அவர் சம்மந்தப்பட்ட மாணவர்களை அழைத்து சத்தம் போட்டார் என்றார்” எனத் தெரிவித்தார். முன்னதாக, பெண்களிடம் உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா என ஆணைய உறுப்பினர் கேட்டார். அவர்கள் சில பிரச்சனைகளைக் கூறினர். அப்போது உறுப்பினர், பிரச்சனைகளை மனுக்களாகத் தாருங்கள், நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.