tamilnadu

img

ஸ்ரீ நாராயணகுரு, நேதாஜி, வஉசி, பாரதி இல்லாத இந்தியா யாருக்கானது?

ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக சில மாநில அரசுகள் அனுப்பிய அலங்கார ஊர்திகளை ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் நிராகரித்திருக்கும் விதம், அவர் களின் மனோநிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. கேரளம், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில  அரசாங்கங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டி ருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், விடுதலைப் போராட்டத்தின் சமூக-கலாச்சாரப் பாரம்பரியங்களுக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரும் அவமதிப்பையேகாட்டுகிறது. இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு இந்தியச் சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டைக் குறிப்பதால், அதற்கேற்ற விதத்தில் மேற்கு வங்க அரசு நேதாஜி சுபாஷ் சந்திர போசையும், விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பையும் சித்தரிக்கும் விதத்தில் அலங்கார ஊர்தியை அனுப்பியிருந்தது. இது நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் முக்கிய விடுதலைப் போராட்ட வீரர்களாக விளங்கிய வீரமங்கை வேலுநாச்சி யார், வ.உ.சிதம்பரனார், விடுதலைப் போராட்டத்தின் தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியார்  உள்ளிட்டோரை அலங்கார ஊர்தியில் சித்தரித்திருந்தது. இதனையும் ஒன்றிய  அரசு ஏற்கவில்லை.

கேரளாவின் அலங்கார ஊர்தியில் மாபெரும் சாதி ஒழிப்புப் போராளியும், மறுமலர்ச்சி இயக்க வீரருமான ஸ்ரீ நாராயண குருவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. இதனை யும் ஒன்றிய அரசு நிராகரித்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகும். அலங்கார ஊர்திகளை அனுமதித்திடும் வல்லுநர் குழுவானது, ஸ்ரீ நாராயண குருவின் சிலைக்குப் பதிலாக ஆதி சங்கராச்சாரியார் சிலை வைக்கப்பட வேண்டும் என்று விரும்பியதாகக் கூறப்படுகிறது.  ஆயினும் கேரள அரசு ஸ்ரீ நாராயண குருவின் சிலையை அப்புறப்படுத்த மறுத்ததன் காரணமாக, கேரள அரசின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டது.   20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமூக சீர்திருத்த வாதியாக இருந்து, விடுதலை இயக்கத்திற்கும், மறுமலர்ச்சி இயக்கத்திற்கும் பங்களிப்பினைச் செய்தவரைவிட, எட்டாம் நூற்றாண்டில் ‘பிராமண தர்மத்தை’ மீட்டமைத்திட்ட ஒரு  சாமியார், எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்? இதனை  இந்துத்துவா சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கிடும் ஒன்றிய ஆட்சியாளர்கள்தான் விளக்கிட முடியும். கேரளா வின் அலங்கார ஊர்தியில் ஆதி சங்கராச்சாரியின் சிலையை  வைத்திட வேண்டும் என்று ஒன்றிய அரசின் வல்லுநர் குழு வற்புறுத்தியதன்மூலம் அது ஸ்ரீ நாராயண குருவை மட்டும்  அவமதித்திடவில்லை, கேரளாவின் ஒட்டுமொத்த முற்போக்கு சமூக-கலாச்சாரப் பாரம்பரியத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பாகும்.   

யார் அந்த ‘வல்லுநர்’

தங்கள் மாநில அலங்கார ஊர்திகளை விலக்கி வைத்திருப்பதனை எதிர்த்துக் கடிதம் எழுதிய மேற்கு வங்க  மற்றும் தமிழ்நாடு அரசு முதல்வர்களின் கடிதங்களுக்குப் பதில் அளித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,  அவ்வாறு விலக்கியிருப்பதை நியாயப்படுத்தி இருக்கிறார்.  அவரின் கூற்றுப்படி, அலங்கார ஊர்திகளை அனுமதித்திடும் வல்லுநர் குழுவில், கலை, கலாச்சாரம், இசை, கட்டிடக்கலை முதலானவற்றில் புகழ்பெற்ற நபர்கள் அங்கம் வகிக் கிறார்கள் என்பதாகும்.  75ஆம் ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடும் குடியரசு தின அணி வகுப்பிற்கு மிகவும் பொருத்தமான நபராக ஆதி சங்கராச்சார்யாவைக் கருதிய வல்லுநர் யார் என்ற கேள்வி எழுகிறது. ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வருக்கு எழுதி யிருக்கும் பதிலில், ஒன்றியப் பொதுப் பணித்துறையும் ஓர் அலங்கார ஊர்தியைப் பெற்றிருப்பதாகவும் அதில் சுபாஷ் சந்திர போசுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அந்த  அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள் ளார். இவர் கூறும் கூற்றுப்படி, ஒரு மாநிலஅரசின் அலங்கார  ஊர்தியைவிட ஒன்றிய அரசின் ஒரு துறை அளித்துள்ள அலங்கார ஊர்தி முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது என்பதாகும். மோடி அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான மற்றும் குறுங்குழுவாதக் கண்ணோட்டத்தின் காரணமாக நடை முறையில் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தின் அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. இது, அரசாங்கத்தின் கூட்டாட்சித் தத்து வத்திற்கு எதிரான அணுகுமுறையையே காட்டுகிறது. ஜனவரி 26 இந்தியக் குடியரசு உருவானதையும், இந்தியா வை மாநிலங்களின் ஒன்றியம் என வரையறுத்திடும் அர சமைப்புச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்டதையும் குறிக்கும் தினமாகும். ஆனால் மோடி அரசாங்கம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நெறிமுறைகளையே மீறி சிதைத்துக் கொண்டிருக்கிறது.

ஜனவரி 19, 2022  / தமிழில்: ச.வீரமணி