tamilnadu

img

புத்திசாலிப் பெண்

ஆங்கிலம் வழி தமிழில்  உதயசங்கர்

முன்பு ஒரு காலத்தில் சோமாலியா நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பெயர் வைல் வால் (பைத்தியக்காரன்). அவன் ஒரு போர் வீரன். கவிதைகளும் எழுதுவான்.  சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் எப்படி சிந்திக்கிறார்கள் என்று சோதித்துப் பார்ப்பான். ஒருநாள் அவன் ஒரு கிராமத்திற்குச் சென்றான். அங்கு உள்ள மனிதர்களைச் சோதிக்க நினைத்தான். அவன் அந்த ஊரிலுள்ள எல்லோரையும் அழைத்தான். அவர்களிடம் ஒரு மிருகத்தின் உடலில் எது வன்முறையையும், அமைதியையும் காட்டுகிற பாகம் அதைக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான். எல்லோரும் இதைப் பற்றியே யோசித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றனர். விலங்குகளின் எந்தப் பாகம் அப்படி வன்முறையையும் அமைதியையும் ஒரே சமயத்தில் காடும் என்று மண்டையை உடைத்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எல்லோரும் அவர்களுடைய கால்நடைகளான ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள் எல்லாவற்றையும் வெட்டுவதற்காக ஒன்று சேர்த்தனர். ஆனால் ஒரு மனிதன் மட்டும் அவனுடைய குடும்பத்தாரிடம் வைல் வால் கேட்ட விசித்திரமான கட்டளையைப் பற்றிச் சொன்னான். நல்வாய்ப்பாக அந்த மனிதனின் மகள் ஒரு நல்ல யோசனை சொன்னாள்.. கொழுத்த ஆட்டுக்குப் பதிலாக ஒரு மெலிந்த ஆட்டைக் கொல்லவேண்டும். பிறகு, அந்த ஆட்டின் மெலிந்த குரல்வளையைக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினாள். மகள் சொன்னபடியே அந்த மனிதன் மெலிந்த, சிறிய, குரல்வளையை எடுத்துக்கொண்டு வரிசையில் எல்லோருக்கும் பின்னால் போய் நின்றான். வைல்வாலின் முன்னால் அந்தச் சிறிய தசைப்பகுதியை வைப்பதற்குப் பயந்தான். ஒவ்வொரு மனிதனாக தான் கொண்டு வந்த கறித்துண்டுகளை வைல்வாலின் முன்னால் வைத்து விட்டு சென்றனர். அவன் தான் கடைசி ஆள். வைல்வால் அவன் கொண்டு வந்த ஆட்டின் மெலிந்த குரல்வளையைப் பார்த்து விட்டு, “நீ ஏன் இந்தச் சிறிய குரல்வளையைக் கொண்டு வந்தாய்?” என்று கேட்டான். உடனே பயந்து போன அந்தக் கிழவன் மகள் சொன்ன யோசனைக்காக மனதுக்குள் அவளைத் திட்டினான். “அரசே.. இது என்னுடைய யோசனை இல்லை.. என் மகள் சொன்ன யோசனைப் படியே கொண்டு வந்தேன்..” என்று சொன்னான் கிழவன். வைல்வால் அவனுடைய மகளை அழைத்து வரச் சொன்னான். வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் மகளைத் திட்டிக் கொண்டே போனான் கிழவன். “அவள் பேச்சைக் கேட்டிருக்கக் கூடாது..ஐயய்யோ.. நான் இப்போது என்ன செய்வேன்..” பிறகு அவன் மகளை அழைத்துக் கொண்டு வைல்வாலின் அரண்மனைக்குப் போனான். வைல்வால் அவனிடம், “நம்முடைய சமூகத்திலேயே மிகவும் புத்திசாலியான பெண் உன் மகள்.. நான் விரும்பியது இந்தக் குரல்வளையைத் தான்.. ஏன் தெரியுமா? மனிதனின் மோசமான பெருந்தீனி தான் நம்முடைய சமூகத்தில் எழுகின்ற ஏராளமான பிரச்னைகளுக்குக் காரணம்.. அடிப்படையில் ஆட்டின் குரல்வளை மனிதர்களிடம் இருக்கிற பேராசையையும் அதனால் விளைகிற வன்முறையையும் காட்டுகிறது” என்றான். பிறகு வைல்வால் அந்த மனிதனின் புத்திசாலி மகளை மணந்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்தான்.