2 ஆண்டுகளாகியும் பூங்கா அமைக்கவில்லை சண்முகா நகர் பகுதி மக்கள் குற்றச்சாட்டு
திருச்சிராப்பள்ளி, செப்.2 - திருச்சி சண்முகா நகர் நலச் சங்கத்தின் தலைவர் வேலாயுதன், செயலாளர் குமரன் ஆகியோர் தலைமை யில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகத்துக்கு திங்களன்று திரண்டு வந்தனர். அவர்கள் மாநகராட்சி ஆணையாளரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் குடியிருப்பு பகுதியில் கடந்த 15.3.2023 அன்று ரூ.80 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்க அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார். இதில் மாவட்ட ஆட்சியர், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இடையில் நீதிமன்ற வழக்கு காரணமாக பூங்கா அமைக்கும் பணி தடைபட்டு இருந்தது. தற்போது எந்த தடையும் இல்லாத நிலையில், அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பூங்கா அமைக்கவில்லை. எனவே பூங்கா அமைக்கும் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்த னர்.