tamilnadu

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீதான குண்டர் சட்டம் ரத்து

சென்னை, ஜன.22- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்  கைதான பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை, அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை  மாநகர காவல் ஆணையர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு  பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து, தனது கணவரை விடுதலை  செய்யக் கோரி, ராஜகோபாலனின் மனைவி சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “கடந்த 2015-ஆம் ஆண்டு  நடந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் எனது கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு ள்ளது. அப்போது ஆன்லைன் வகுப்புகள் எதுவும் நடைபெற வில்லை .தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், முழுமையாக உண்மையை கண்டறியாமல் செவிவழி தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் எனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பவம் நடைபெற்றபோது ஆன்லைன் வகுப்புகள் நடைபெறவில்லை என்பதை கருத்தில் கொள்ளாமல், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான காரணங்களை, குறித்த காலத்தில் மனுதாரருக்கு வழங்க வில்லை எனக் கூறி, தனியார் பள்ளி ஆசிரியர் ராஜ கோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த  உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.