tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள் போதிய போலீசாரை நியமிக்க கோரிக்கை

நாகர்கோவில்,மே 29- கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக கன்னியாகுமரியில் காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.பின்னர் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியது . இதனால்  சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விடுமுறை முடிந்து இன்னும் ஒரு சில நாட்களில் பள்ளிகள்  திறக்கப்படும் நிலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இங்கு அதிகரித்து வருகிறது  மேலும் படகு போக்குவரத்து டிக்கெட் கவுண்டரில் வரிசையில் நின்ற  சுற்றுலா பயணிகளிடையே தள்ளுமுள்ளும் வாக்குவாதமும்  நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை ஒழுங்குப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடலில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப்பயணிகள் ஆபத்தை உணராமல் பாறைகளில் ஏறி செல்ஃபி எடுத்து, உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.  சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில்  பாதுகாப்புப்பணியில் போதிய காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டும் சுற்றுலாப்பயணிகள், அசம்பாவிதங்கள் நிகழும் முன்னர். பாதுகாப்புக்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் போதிய காவல்துறையினரை பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

27 கிலோ புகையிலைப்  பொருட்களுடன்  ஒருவர் கைது

குழித்துறை,மே 30- குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் 27 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது,இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மார்த்தாண்டம் காவல் சார்பு ஆய்வாளர் இந்திர சூடன் தலைமையில் போலீசார்  குறும்பேற்றி பகவதி அம்மன் கோவில் அருகே மெயின் ரோட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வேகமாக வந்த காரை நிறுத்தி, சோதனையிட்டனர்.அதில் 27 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.13 ஆயிரம் ஆகும் .சொகுசு கார் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காரை ஓட்டி வந்த அருமனை மூடோடை  சேர்ந்த  பெமிலின் (30) கைது செய்யப்பட்டார் .இதுகுறித்து மார்த்தாண்டம் ஆய்வாளர்  வேளாங்கண்ணி உதய ரேகா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

குமரி மாவட்ட கிராமங்களில்  சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம்

நாகர்கோவில், மே 29- கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்  ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் உதவியுடன் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும்  சிசிடிவி கேமிரா பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின்  அவர்களின் முன்னெடுப்பான   ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம்( ஒரு காவலர் இரண்டு சிசிடிவி ) பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட மக்களிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு காவல்துறைக்கு கிடைத்து வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான ‘அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி’ என்ற இலக்கை  அடையும் வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 640 சிசிடிவி- க்கள் பொதுமக்கள் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வீட்டையும், கிராமத்தையும் பாதுகாப்பதற்கும், குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை கண்டறிவதற்கும்  சிசிடிவி முக்கிய பங்காற்றுகிறது என்பதை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளித்து வருவதால்  அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி என்ற இலக்கு விரைவில் எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

சைபர் குற்றங்கள் குறித்து வங்கி மேலாளர்களுடன் கலந்தாய்வு

திருவாரூர், மே29-  திருவாருர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றம் நிதி நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் பெருகிவரும் சைபர் குற்றங்கள் குறித்தும், வங்கிகளின் பாதுகாப்பு குறித்தும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கருண் கரட்      தலைமையில் நடைபெற்றது. வங்கிகளில் பெருகிவரும் சைபர் குற்றங்கள் குறித்தும், அதிக அளவில் வங்கி கணக்கிலிருந்து வெளிமாநிலங்களுக்கு பண பரிமாற்றம் நடைபெறுதல் குறித்தும் சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கவேண்டும். அதனால் சைபர் குற்றங்களை பெருமளவு குறைக்க முடியும் எனவும், மேலும் வங்கிகளின் அனைத்து பகுதிகளிலும் கேமரா பொருத்துதல், வங்கிகளின் வெளிபகுதிகளில் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் வாகனங்களின் நம்பர்கள் தெரியும் அளவிற்கு தரமான தொலைதுார கேமராக்கள் பொருத்தவேண்டும். அனைத்து வங்கிகளிலும் அவசியம் பாதுகாப்பு அலுவலர் நியமித்திடவேண்டும் என கூறினார்கள். தொடந்து, மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவ்வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும், கடந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்குகளில் எதிரிகளின் வங்கி கணக்குகளை முடக்குதல், அவர்களுடன் கஞ்சா கடத்தலுக்கு தொடர்பில் இருப்பவர்களைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரிகளும் தங்கள் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி ரோந்து பணி மேற்கொண்டு கள்ளத்தனமான மதுவிற்பனை, தடைசெய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா, பான்மசாலா மற்றம் கூலீப் போன்றவற்றை கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.