சென்னை, மார்ச் 1- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் 431.50 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.45,600 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள்/பொட்டலங்கள், பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் போன்ற 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில் அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.11,000 அபராதம் விதிக்கப்பட்டு, 96 கிலோ கிராம் வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள், கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.29,500 அபராதம் விதிக்கப்பட்டு, 289.5 கிலோ கிராம் வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பகுதிகளில் 28ஆம் தேதி 93 வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.3,600/- அபராதம் விதிக்கப்பட்டு, 34 கிலோ கிராம் வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள் மற்றும் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பகுதிகளில் செவ்வாயன்று (மார்ச் 1) வணிக நிறுவனங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டு, 12 கிலோ கிராம் வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள் என மொத்தம் 431.50 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு, ரூ.45,600 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.