tamilnadu

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 எரிமலைக் குழம்பில் நடந்த மனித முன்னோடி 

3.66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மனித இனத்தின் முன்னோடி இனப் பிரதிநிதி ஒன்று எரிமலைக் குழம்பு சேற்றில் நடந்த ஐந்து காலடித் தடங்கள் 1976ஆம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டன.ஆனால் இவை எந்த இனம் என்பது குறித்து  தெளிவு இல்லாமல் இருந்தது. ஒரு இளம் கரடி நின்று கொண்டிருக்கும்போது சில அடிகள் எடுத்து வைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது.ஆனால் அந்த இடத்திற்கு அருகில் 1978ஆம் ஆண்டு  தோண்டி எடுக்கப்பட்ட தடங்கள் 3.8 மில்லியன் வருடங்களுக்கும்  3 மில்லியன் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த  ஆஸ்ட்ரேலோபிதகஸ் அபாரென்சிஸ்(Australopithecus afarensis) என்ற மனித முன்னோடி குடும்பத்தை சேர்ந்ததாகக் கருதப்பட்டது. இதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபலமான படிமம்(fossil) லூசி எனப்படும் பகுதி எலும்புக்கூடு ஆகும். மெக்நட் என்கிற இளம் ஆய்வாளரும் அவரது பேராசிரியர் ஜெரெமி டி சில்வா மற்றும் குழுவினரும் இந்தக் காலடித் தடங்களை தோண்டி எடுத்து சுத்தம் செய்து அளவிட்டனர். புகைப்படமும் 3D ஸ்கேனும் எடுத்தனர். இந்தப் படங்கள் பருவம் அடையாத குள்ளமான  நபர் ஒருவரின் காலடித் தடம் என சுட்டிக்காட்டின. இதே புகைப்படங்களை ஆய்வு செய்த  பல ஆய்வாளர்களின் ஆய்வுகளை பரிசோதித்ததில் அவை  லூசி இனத்தின் கூடவே வாழ்ந்த இன்னொரு ஹோமினின் இனம் எனத் தெரிகிறது. ஹோமினின் என்ற இந்த இனம்தான்  பரிணாம வளர்ச்சி அடைந்து மனித இனமாக மாறியது. 

கடல் வெளிவிடும் கார்பன் 

அண்டார்டிக்கா பிரதேசத்தை சுற்றியுள்ள தெற்குக்கடல், பருவ நிலை அமைப்பின் கேந்திரமாக கருதப்படுகிறது.இது கார்பனை உட்கொள்கிறதா அல்லது வெளிவிடுகிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெற்குக்கடல் கார்பனை உட்கொள்கிறது என்றும் மிதவைகள் மூலம் நடத்தப்பட்ட சோக்கோம் (SOCCOM) எனும் ஆய்வில் கார்பனை வெளிவிடுகிறதென்றும் மாறுபட்ட முடிவுகள் கூறப்பட்டன. மூன்றாவதாக ஒரே இடத்தில் கப்பல்களிலிருந்து எடுக்கப்பட்ட நீரை ஆய்வு செய்து அதனுடன் ஒப்பிடுவது சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் இரண்டு ஆய்வுகளும் தெற்குக் கடல் டிசம்பர்,ஜனவரி பிப்ரவரி மாதங்களில் கார்பனை வெளிவிடுகிறது என்பதில் ஒருமித்த முடிவுகளைக் காட்டிள்ளது. விமானங்கள் மூலம் செய்யப்படும் ஆய்வு கடலிலிருந்து வெளிவிடும் கார்பன் அளவுகள் குறித்த ஒரு பரந்த சித்திரத்தை தரும்; மிதவைகள் ஆய்வு ஒரு குறிப்பிட்ட பகுதி மற்றும் பிரதேச கார்பன் வேறுபாடுகளைக் காட்டும் என்கிறார் ஒரு ஆய்வாளர். முடிவுகள் எப்படியிருந்தாலும் ஏற்கனவே கடலானது அமிலத்தன்மை அதிகரித்தும் புவி வெப்பமயமாதலால் ஏராளமான வெப்பத்தை சேமித்துவைத்திருக்கும் கலனாகவும் உள்ளது என்கிறார் இன்னொரு ஆய்வாளர்.

3 அணுவின்  புதிய நிலை

குவாண்டம் ஸ்பின் லிக்யுட்(quantum spin liquid) எனும் நிலையில் அணுக்கள் இருக்கும் என ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தெரிவிக்கபபட்டது.ஆனால் இது வரை சோதனை சாலையில் அதனை கண்டறிய இயலவில்லை. இப்போது ஆய்வாளர்கள் மிகை குளிர் நிலையில் அணுக்களை லேசர் மூலம் நிலைநிறுத்தியபோது அந்த நிலையின் அம்சங்கள் காணப்பட்டன. இந்த நிலையில் குவாண்டம் பிணைப்புகள் மிக அதிக  நிலையில் வெளிப்படுகிறதாம்.இந்த பிணைப்புகள் குவாண்டம் கணினிகளை உருவாக்கப் பயன்படும் என்கிறார்கள் இதன் ஆய்வாளர்கள். டிசம்பர் மூன்றாம் தேதியிட்ட சயின்ஸ் இதழில் இந்த ஆய்வு வெளிவந்துள்ளது.  

4 பூமியில் ஒரு சூரியன் 

‘செயற்கை சூரியன்’ என்றழைக்கப்படும் டோகாமாக்  சீன அணு உலை 70மில்லியன் செல்சியஸ் டிகிரி வெப்பத்தில் 1056  நொடிகள் இயங்கி சாதனை புரிந்துள்ளது. இந்த வெப்ப நிலையில் சூரியனில் டிட்டீரியம் எனும் அணு சேர்க்கை ஏற்பட்டு அளவிடந்த ஆற்றல் உண்டாகின்றது. இதைப்போன்றே கடலிலிருந்து டிட்டீரியம் அணுக்களைப் பயன்படுத்தி பூமியிலும் மாசற்ற ஆற்றல் உண்டாக்கலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.  

5 பேக்டீரியாவிற்கும் வைரசுக்கும் இடையில் 

ஷிகெல்லா ஃபிலக்ஸ்நெரி( Shigella flexneri) எனும் பேக்டீரியா  மாசுபட்ட நீரின் மூலம் பரவுகிறது.இதனால் குடல்பகுதிகள் பாதிக்கப்பட்டு சீத பேதி உண்டாகிறது.சுத்தமான குடிநீர் கிடைக்காத ஆப்பிரிக்கா தெற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளதாம்.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. இதைக் குணப்படுத்த தரப்படும் ஆண்டிபயாட்டிக்ஸ் மருந்துகளுக்கு இந்த கிருமிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுவிட்டன. எனவே இப்பொழுது வைரஸ் நுண்கிருமிகளைக் கொண்டு இவற்றை அழிக்கும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்த சிகிச்சை பேஜ் தெரபி எனப்படுகிறது. இவை வைரஸ்களுக்கும் எதிர்ப்புசக்திகளை கொண்டு உருமாறுகின்றனவாம்.ஆனால் இந்த உருமாற்றத்தில் அவை நமது செல் சுவர்களுக்குள் புகும் சக்தியை இழந்துவிடுகின்றன. எனவே மனிதர்களை தொற்றினாலும் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை. வைரசுக்கும் பேக்டீரியாவிற்கும் நடக்கும் போட்டியை நமக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.