1 மின்னுவதெல்லாம் பொன்னல்ல
செங்காவி, பழுப்பு மற்றும் இலைப் பச்சை போன்ற நிறங்கள் விலங்குகளுக்கு ‘உரு மறைப்பு’ எனும் விதத்தில் உதவி செய்வதை நாம் அறிவோம். கடல் மீன்கள்,சிலந்திப் பூச்சிகள்,வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் பெரும்பாலான வண்டுகள் ஆகியவற்றில் கண்ணாடி போல் பளபளப்பான தோற்றம் பரிணமித்துள்ளது என்கிறார் ஆஸ்திரேலியா மெல்போர்ன் பல்கலைக்கழக தோற்ற சூழல் அறிவியலாளர் அமன்டா பிராங்க்ளின். நீர்,இலைகள்,கிளைகள் போன்றவற்றை இந்த மேற்பரப்பு பிரதிபலித்து அவற்றை வேட்டையாடும் உயிரினங்களைக் குழப்பி இவை தப்பிக்க உதவுகின்றன என்று கருதப்பட்டது. இது குறித்து ஆய்வதற்காக அமன்டா பிராங்க்ளின் குழுவினர் களிமண்ணால் இரண்டுவிதமான செயற்கை வண்டுகளை தயாரித்தனர்.ஒன்று பளபளப்பான மேற்பரப்பும் இன்னொன்று சொரசொரப்பான பரப்பும் கொண்டது. ஆஸ்திரேலியாவின் இரண்டு பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட இந்த மாதிரிகள் நான்கு முதல் ஆறு நாட்களுக்கு விடப்பட்டன.வண்டுகளை உண்ணும் பறவைகள் வாழும் இப்பகுதிகளில் இந்த மாதிரிகளின் மேல் பறவைகளின் அலகு கொத்திய அடையாளங்களை பரிசோதித்தனர். இரண்டு மாதிரிகளிலும் ஒரே எண்ணிக்கையிலான காயங்களே இருந்தன. பெரிய வேறுபாடுகள் காணப்படவில்லை. அதாவது எதிரிகளிடமிருந்து தப்பிக்க இந்த பளபளப்பு உதவவில்லை. மனிதர்களின் கண்களில் கண்காணிக்கும் பொறிகளைக் கொண்டு சோதித்ததிலும் இரண்டு மாதிரிகளையுமே அவர்களால் காண முடிந்தது. ஆகவே இந்த உரு மறைப்பானது சில நேரங்களில் மட்டுமே பயன்படுகிறது.ஆனால் இந்த மேற்பரப்பானது வேறு சிலவிதங்களில் உதவுகிறது.வெடிப்புகள் விழாமல் இருக்கவும் பூஞ்சை தாக்காமல் இருக்கவும் உதவலாம். தங்கம்,தாமிரம்,பச்சை,ஊதா போன்ற உலோக பளபளப்பு கொண்ட இவ்வண்டுகள் வயதுக்கு வந்ததும் ஊசிஇலை மரங்களில் ஏறி தங்கள் இணைகளை தேடுகின்றன. இது டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் குளிர்காலப் பருவத்தில் நடக்கிறது. எல்லோரும் இந்த கிறிஸ்துமஸ் வண்டுகளைப் பார்க்க விரும்புகின்றனர்.’மனிதர்கள் புற தோற்றத்திலேயே கவரப்படுகிறார்கள். இந்த வண்டுகளின் பளபளப்பு விடுமுறை பரிசு;அவ்வளவுதான்’ என்கிறார் பிராங்க்ளின்.
2 இந்திய தொடக்க நிறுவனத்தின் செயற்கைக்கோள்
இந்திய தொடக்க நிலை நிறுவனம் பிக்செல் தனது முதல் செயற்கைக்கோளை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிரான்ஸ்போர்ட்டர்-4 மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது.’சகுந்தலா’ எனப் பெயரிடப்பட்ட இது பிக்செலின் சுயமாக தயாரிக்கப்பட செயற்கைக்கோளாகும். விண்ணிற்கு அனுப்பட்டதிலேயே அதிக தெளிவு திறன் கொண்ட வணிக ரீதியான மிகு நிறப்பிரிகை கேமிரா இதில் வைக்கப்பட்டுள்ளது.புவிக்கு தேவையான உடல்நலன் கண்காணிப்பு ஒன்றை நிறுவுவதே இந்த நிறுவனத்தின் நோக்கமாம்.
3 கிருமிகளை அழிக்க புற ஊதா விளக்குகள்
கொரோனா வைரஸ் மற்றும் அது போன்ற வைரஸ்கள் பேக்டீரியாக்கள் ஆகியவற்றை அழிப்பதற்கு மிகை புறஊதா-சி (far ultra violet-c(UVC) எனும் ஒளிவிளக்குகளை ஆய்வாளர்கள் வடிவமைத்து சோதித்துள்ளனர். மனித திசுக்களை சேதமடையாமல் இது செயல்படுகிறதாம். ஐந்து மிகை யூவிசி விளக்குகளை பயன்படுத்தி ஒரு அறையில் காற்றிலிருந்த நுண்கிருமிகளை ஐந்து நிமிடத்தில் 98% அழித்துள்ளனர் என்கிறது இந்த ஆய்வு. மேற்பரப்புகளை சுத்தம் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்படும் சாதாரண யூவிசி விளக்குகள் நம் கண்கள் கைகள் ஆகியவற்றிற்கு சேதம் விளைவிக்கின்றன.
4 சூரியஒளி ஆற்றலே எதிர்காலம்?
அமெரிக்காவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது அதிகரித்துள்ளதாம்.சூரியதகடுகள் மலிவானதும் திறன் கொண்டதுமானதுமாக மாறியுள்ளதே இதற்குக் காரணம். உலகின் மின் ஆற்றல் தேவையில் கணிசமான அளவு சூரிய ஒளி ஆற்றலிலிருந்தே வரும் என பல அறிவியலாளர்களும் பொறியாளர்களும் நம்புகின்றனர். ‘சூரியஒளி பண்ணைகள்’ எனப்படும் பிரம்மாண்டமான சூரிய ஒளி அலகுகளை நிர்வ இயலும் என்பதே இதற்குக் காரணம். மெகா வாட் மற்றும் அதற்கு மேல் நிலையிலும் இப்போதுள்ள மின் நிலையங்களுடன் இவை போட்டியிடுமாம்.
5 ஹீமோஃபீலியாவிற்கு மரபணு சிகிச்சை ?
நமது உடலில் காயம் ஏற்படும்போது ரத்தம் உறையாமல் போகும் கோளாறுக்கு ஹீமோஃபீலியா (hemophilia) என்று பெயர்.இது பெரும்பாலும் ஆண்களுக்குதான் ஏற்படுகிறதாம்.ரத்தம் உறைவதற்கான புரதத்தை தயாரிக்கும் மரபணுவில் உள்ள காரணி VIII குறைபாடே இதற்குக் காரணம்.இதற்கு ஜீன் தெரபி என்கிற சிகிச்சை முறை உள்ளது. தீவிரமான குறைபாடு உள்ளவர்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை காரணி VIII உட்செலுத்த வேண்டி வந்தது.இதில் இப்போது மேலும் முன்னேற்றம் ஏற்பட்டு ஒரு முறை உட்செலுத்தினாலே பலன் கொடுக்கிறதாம்.132ஆண்களுக்கு சோதித்ததில் ஒரு வருடம் கழித்து 88% நபர்களுக்கு நோய் முற்றிலும் வராமல் தடுக்கும் அளவிற்கு அல்லது வந்தாலும் மிதமான நோய் ஏற்படும் அளவிற்கு காரணி VIII அதிகரித்து காணப்பட்டது. அடினோ என்கிற கிருமி மூலம் உட்செலுத்தப்படும் ஜீன் எந்த நோயையும் ஏற்படுத்துவதில்லை.மற்ற உறுப்புகளில் எந்தவித மாற்றமும் நடைபெறுவதில்லை.ஈரல் மட்டும் இதிலிலுள்ள கட்டளைகளை ஏற்று காரணி VIII உற்பத்தி செய்கிறது. ஆனால் இந்த சிகிச்சையில் சில பாதக அம்சங்கள் உள்ளன. ஒன்று தற்காலிகமாக ஈரல் வீக்கம் எனும் பக்க விளைவு ஏற்படுகிறதாம். இதற்கு கிருமி எதிர்ப்பு அடக்க மருந்துகளைக்(IMMUNO SUPPRESENT) கொடுக்க வேண்டும். இரண்டாவது இது எவ்வளவு காலம் பலன் கொடுக்கும் என்று தெளிவாகவில்லை. மூன்றாவது இது ஒரு முறை மட்டுமே கொடுக்க முடியும். இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. மார்ச் 17 தேதியிட்ட நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் இந்த ஆய்வு வெளிவந்துள்ளது.
6 காவிரி நதியில் நீர்நாய்கள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்
நதிகளில் மீன்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதில் நீர்நாய்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. நதிகள் மாசுபடுதலும், சாதகமற்ற இதர சூழ்நிலைகளும் நதிகளில் இருந்து இவை காணாமல் போகக் காரணமாகின்றன. இப்போது மறைந்துவிட்டதாகக் கருதப்பட்ட இந்த உயிரினங்கள் காவிரி நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீர்நாய்கள் மீண்டும் காட்சியளித்துள்லன.
ஏன் அழிகின்றன?
மிருதுவான தோல் உள்ள இவற்றின் உணவு நதிநீர் மீன்கள். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஆசிரியர்களே இவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். கல்லூரியின் சூழல் அமைப்பின் ஒரு பாகமாக நடந்த முகாமின்போது காவிரியில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது இவை இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) அழியும் நிலையில் உள்ள விலங்குகளின் சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மனிதனே காரணம்
மிதமிஞ்சிய மீன் பிடித்தல், நீர்நிலைகளின் குறைவு போன்றவை இவற்றின் எண்ணிக்கை குறையக் காரணம். மென்மையான இவற்றின் தோலிற்காகவும் இவை பெருமளவில் வேட்டையாடப்படுகின்றன. வறட்சி, காலநிலை மாற்றம் போன்றவை இவற்றின் வாழிடஇழப்பு மற்றும் உணவுப் பற்றாக்குறைக்குக் காரணமாகின்றன. காவிரி நதியில் வறட்சி இவற்றை பல ஆண்டுகளாக இப்பகுதியில் இருந்து காணாமல் போகச் செய்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
என்று மாறும்?
நீர் சூழல் மண்டலத்தில் இவற்றின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூழல் சீரழிவினால் மண் புழுக்கள் முதல் யானை புலி சிங்கம் மட்டுமல்ல அதிகம் அறியப்படாத நீர்நாய்கள் போன்ற பல உயிரினங்களும் பூமியில் இருந்து வேகமாக மறைகின்றன. கண்ணெதிரே மரணம் நடக்கும்போதும் நம்மை அது தீண்டாது என்று நினைப்பது போல மனிதன் எந்த உயிரினம் எங்கு அழிந்தால் நமக்கென்ன என்று மனிதன் நினைக்கிறான். ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ற விலங்கினத்தின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இயற்கை காப்பாற்றப்படும்.
7 மனித உடலில் ஒரு புதிய உறுப்பு
மனிதனின் தாடையில் புதிய தசையடுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கன்னத்தில் முக்கிய தசைப்பகுதியான மசெட்டர் தசை அடுக்கில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இது உணவு சாப்பிடும்போது சுருங்கி விரியும் தசை அடுக்கு. “மஸ்குலர்மசெட்டர் பார்ட்ஸ் கரோனிடியா” என்பது இதன் பெயர். இதுவரை இரண்டு அடுக்குகளே இப்பகுதியில் இருந்ததாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் மூன்றாவதாக ஒரு அடுக்கும் கூட இப்பகுதியில் இருக்கிறது என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கன்னல்ஸ் ஆப் அனாட்டமி என்ற இதழில் இது பற்றிய ஆய்வுக்கட்டுரை வெளிவந்துள்ளது. மருத்துவ ஆய்வுகளுக்காக மரணமடைந்தபிறகு தானமாக அளித்த 12 பேரின் உடல்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக பார்மாலிஹைடு கரைசலில் வைக்கப்பட்ட 12 உடல்களின் தலைகள், 16 இறந்த உடல்களின் சி.டி.ஸ்கேன், உயிருள்ள மனிதர்களின் காந்த பிம்பமாக்கல் ஸ்கேன்களும் (MRI scane) பரிசோதிக்கப்பட்டன. கம்ப்யூட்டர் டோமோகிராபிக் ஸ்கேன்களைப் பயன்படுத்தியும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த புதிய தசை அடுக்கு மற்ற இரண்டு அடுக்குகளில் இருந்து எளிதில் பிரித்து அடையாளம் காணும்விதத்தில் அமைந்துள்ளது என்று பேஸல் பல்கலைக்கழக உயிர் மருந்தியல் பிரிவின் டாக்டர் சில்வியா மெர்சி கூறுகிறார். தாடை எலும்பை உறுதிப்படுத்த இந்த புதிய தசை அடுக்கு பயன்படுகிறது. தாடையின் கீழ்ப்பகுதியை செவியுடன் இணைக்க இந்த அடுக்கு உதவுகிறது. மசெட்டர் பகுதியில் உள்ள தசைகள் பற்றி நீண்டகாலமாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. 1995ல் வெளிவந்த கிரேஸ் அனாட்டமி (Greys anatomy) இதழ் ஆய்வில் மசெட்டர் பகுதியில் மூன்று தசை அடுக்குகள் உள்ளன என்று விரிவாகச் சொல்லப்பட்டது. ஆனால் இந்த ஆய்வுகள் மற்ற உயிரினங்களின் தாடை பகுதிகளுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்டது. 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் மூன்று அடுக்குகள் உள்ளன என்ற ரீதியில் ஆய்வுமுடிவுகள் வந்தன. ஆனால் மசெட்டர் பகுதியின் மேற்பரப்பில் இருக்கும் தசை அடுக்கை பற்றி மட்டுமே ஆராயப்பட்டது. இது குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்துவந்ததால் ஆய்வாளர்கள் இது பற்றி ஆராய்ந்தனர். இதன் மூலம் இப்போது மனிதனின் உடலில் ஒரு புதிய உறுப்பு இருப்பது தெரியவந்துள்ளது.