tamilnadu

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு சர்வதேச விருது

சென்னை, ஜன. 27- உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சர்வதேச விருதான டி.எக்ஸ். 2 என்ற உயரிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2013ஆம் ஆண்டு சுமார் 30 புலிகள் மட்டுமே இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் புலிகளை பாதுகாப்பதற்கு கன்சர்வேஷன் அண்டு டைகர் உள்ளிட்ட 13 அமைப்புகள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த கூட்டமைப்பு பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்திய நாடுகளுக்கு டி.எக்ஸ். 2 எனும் விருதை வழங்குகின்றன. இதன்படி சர்வதேச அளவில் 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தியதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விருதுக்கு தேர்வாகியுள்ளது. காணொளி மூலம் தமிழக அரசுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.