சென்னை, ஜன.21- தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலை யத்துறையின் கீழ் இயங்கி வரும் 5 கல்லூரி கள் மற்றும் ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் 225 தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் 129 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தொகுப்பூதிய உயர்வுக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பழனி கோவில் நிர்வாகத்திலுள்ள மூன்று கல்லூரிகள் மற்றும் ஒரு பள்ளி, குழித்துறை ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி, குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் மற்றும் பள்ளியின் 24 தற்காலிக ஆசிரியர்களுக்கு தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த தொகுப்பூதிய உயர்வின் மூலம் ஆண்டிற்கு ரூ.2.72 கோடி நிர்வாகத்திற்கு கூடுதல் செலவினம் ஏற்படும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அற நிலையத் துறை ஆணையர் குமர குருபரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.