ஆர்எஸ்எஸ் தலைவருக்கு வெள்ளி வேல் பரிசு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என எஸ்.பி.வேலுமணி விளக்கம்
கோயம்புத்தூர், ஜூன் 23 - ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது சகோதரர் இருவரும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு வெள்ளியில் வேலும், முருகன் சிலையும் பரிசளித்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்டனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல ‘அடடா சூப்பர்’ என்பது போல ஒரு விளக்கத்தை வேலுமணி அளித்துள்ளது செய்தியாளர்களையே நிலைகுலைய வைத்துள்ளது. கோவை பேரூர் ஆதீனத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா மற்றும் பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா ஆகியவை ஒருசேர நடைபெற்றன. இதில், மோகன் பகவத் கலந்துகொண்டார். இந்நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எஸ்.பி. வேலுமணியின் சகோதரர் எஸ்.பி. அன்பரசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். விழா மேடைக்கு மோகன் பகவத் வந்தபோது, எஸ்.பி. வேலுமணி வெள்ளி முருகன் சிலையையும், அவரது சகோதரர் எஸ்.பி. அன்பரசன் வெள்ளி வேலினையும் கொடுத்து வரவேற்றனர். முதல் நாள், மதுரையில் நடைபெற்ற இந்து முன்னணி மாநாட்டில் அண்ணா மற்றும் பெரியார் குறித்து அவதூறான வீடியோ ஒளிபரப்பப்பட்டபோது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமைதியாக இருந்தது, ஏற்கெனவே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆர்எஸ்எஸ் விழாவில் வேலுமணி பங்கேற்றதுடன், அவ்வமைப்பின் தலைவருக்கு வெள்ளியிலான முருகன் சிலை மற்றும் வேல் பரிசளித்தது விவாதத்தை ஏற்படுத்தியது. இது ஊடகங்களில் பேசுபொருளான நிலையில், ‘சிறுவாணி அணை குறித்து அண்ணன் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகிறார்; உடனே கோவை விமான நிலையம் வாங்க’ என அவசர அழைப்பு ஊடகத்தினருக்கு வந்தது. ஊடகத்தினரும் பறந்தடித்து சென்றனர். அங்கு செய்தியாளர்களை சந்தித்த வேலுமணி, சிறுவாணியில் இப்போதெல்லாம் அடிக்கடி தண்ணீர் திறந்து விடுகிறார்கள், இதனை கண்டித்து போராட்டம் நடத்தப் போகிறோம் என்று ஆரம்பித்து, “பேரூர் ஆதீனத்தில் சாந்தலிங்க அடிகளார் நிகழ்விற்குத் தான் நான் சென்றேன். ஒவ்வொரு வருடமும் சாந்தலிங்க அடிகளார் நிகழ்வில் பங்கேற்பது வழக்கம். ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றதாகத் தகவல் பரப்பப்படுகிறது. சாந்தலிங்க அடிகளார் நூற்றாண்டு விழாவிற்குத் தான் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை,” “ஒரு மகான் நிகழ்விற்குச் செல்வதை திரித்து விடுகின்றனர். ஆர்.எஸ். பாரதி முருகன் மாநாட்டையும், இந்த நிகழ்வையும் சம்பந்தப்படுத்தி பேசியிருக்கிறார். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு நம்மை யாரும் அழைக்க மாட்டார்கள். நாங்களும் போக மாட்டோம்” என சூப்பர் விளக்கம் அளித்தார். மேலும், மதுரையில் நடந்த இந்து முன்னணி மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்குப் பெரியார், அண்ணாவை விமர்சித்து வீடியோ போடுவது தெரியாது,” என்றார். ஆக, வேலுமணிக்கு சாந்தலிங்க அடிகளார் நூற்றாண்டு விழாவுக்குத்தான் அழைப்பு வந்தது, ஆர்எஸ்எஸ் விழாவுக்கு இல்லையாம். சரி, அப்போ வெள்ளி முருகன் சிலையும், வெள்ளி வேலும் சும்மா கைதவறிப் போனதா என்று ஊடகத்தினர் கிசுகிசுக்க.. அதற்கும் வேலுமணி என் தொகுதியில் நிகழ்ச்சி நடைபெறுவதால் அவருக்கு வெள்ளியில் பரிசளித்தேன் என்றார். இந்த பதிலை எதிர்பார்க்காத ஊடகத்தினர், முருகனுக்கே விபூதி அடிக்கும் அண்ணன் வேலுமணி நமக்கு அடிக்கமாட்டாரா என நக்கலடித்துக்கொண்டே அங்கிருந்து கிளப்பினர்.