புதுதில்லி, பிப். 24- ஹரியானா மற்றும் தில்லியில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:- ஹரியானாவில் அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களில் ஆயிரக்கணக்கானோர் முதல்வரின் தொகுதியான கர்னாலில் இரவு- பகலாக தொடர் தர்ணாவில் ஈடுபட்டுவருகின்றனர். தில்லியிலும் ஆயிரக்கணக்கான அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடி அறிவித்தபடி தொழிலாளர்களுக்கு ரூ.1500 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.750 ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு திறன் பெற்ற மற்றும் திறன் பெறாத பணியாளர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என ஹரியானா சட்டமன்றத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார். அவர் தனது அறிவிப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கடந்த இரண்டரை மாதங்களாக நடைபெற்று வரும் வேலைநிறுத்ததத்தை முதல்வர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான திட்டங்களை அமல்படுத்துவதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். கொரோனா பரவலின் போது அங்கன்வாடிகளில் உணவு வழங்கப்படவில்லை. மாநில அரசின் பிடிவாதத்தால் அங்கன்வாடி மையங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. இது பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களின் போராட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் மாநில அரசு அவர்களை அச்சுறுத்துகிறது. நூற்றுக்கணக்கானோர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அடக்குமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். பணிநீக்கம் தொடர்பான உத்தரவை ரத்து செய்து மீண்டும் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர் நிலைக்கு தரம் உயர்த்தவேண்டும். அதுவரை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.24 ஆயிரம், உதவியாளர்களுக்கு ரூ.16 ஆயிரம் வழங்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய அனைத்து ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் வழங்கவேண்டும், பிரதமரின் அறிவிப்பின்படி, தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு முறையே ரூ.1500 மற்றும் ரூ.750 வழங்க வேண்டும். அதேபோல், தில்லியில் போராடும் தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தில்லி மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஹரியானாவில் கடந்த 76 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் தனது புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. 2018-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்து பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு, காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி வேலைநிறுத்தத்தை அடக்க முயல்கிறது. ஆஷா ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தை பாய்ச்சுகிறது. இது கண்டிக்கத்தக்கது. ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.
-ஐஎன்என்