tamilnadu

இந்திய மாணவ, மாணவிகளை உக்ரைன் போலீசார் சித்ரவதை செய்கிறார்கள்

புதுதில்லி,மார்ச் 2- உக்ரைன் போலீசார்  இந்திய மாண வர்களை எல்லையை கடக்க விடுவ தில்லை என்றும் கடக்க முயன்றால் தாக்குகிறார்கள் என்றும் நாடு திரும்பிய இந்திய மாணவி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நட வடிக்கை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனில் விமானப்போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அங்கிருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து நாடு திரும்ப இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி  கடும் குளிரில் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் எல்லையை நோக்கி செல்லும் இந்திய மாணவர்கள் தாக்கப்படு வதாக நாடு திரும்பிய மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவலை கூறி யுள்ளார். உக்ரைனில் மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பு பயிலும் மாணவி ஸ்ருதி  நாயக் ஏர் இந்தியா விமானம் மூலம் தாயகம்  திரும்பினார். இதுகுறித்து அவர் கூறு கையில், “இந்தியா திரும்ப பிப்ரவரி 16ஆம்  தேதிக்கு விமான டிக்கெட் எடுத்திருந் தேன். ஆனால் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் மார்ச் 3 ஆம் தேதிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தேன். அதுவும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பிப்ரவரி 26 அன்று பேருந்தில் 400 கிமீ பயணம் செய்து ருமேனியா விற்கு வந்தடைந்தேன். அந்நாட்டு அரசு இந்திய மாணவர்களுக்கு உதவியது. அங்கிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம்  மூலமாக தில்லிக்கு வந்தடைந்தேன். நான்  அதிர்ஷ்டசாலி. உயிருடன் வீடு திரும்பி யுள்ளேன்.  உக்ரைனில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிறது. இந்திய மாணவர்களை சித்ரவதை செய்கிறார்கள். எங்களை உக்ரைன் எல்லையை விட்டு கடக்க காவ லர்கள் அனுமதிக்கவில்லை. எல்லையை யாராவது கடக்க முயன்றால் கடுமையாக தாக்குகிறார்கள். மாணவிகளை கூட  துன்புறுத்துகிறார்கள். இதில் சில மாண வர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.