நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கக் கோரிக்கை
தஞ்சாவூர், ஜுன் 16- தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை பயணியர் விடுதியில் தங்கியிருந்த தமிழக முதல்வரை, கிழக்கு கடற்கரைச் சாலை தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், சங்கத்தின் துணைத் தலைவர் பி.கோவிந்தசாமி, செயலாளர் வி.கே.எம்.தணிகைமணி, மண்டலத் தலைவர்கள் ஏ.கமால்பாட்சா, இராமையன் சுப்பிரமணியன் மற்றும் வி.பி.ஜெயச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “நியாய விலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். தென்னையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்திட தனியார் முதலீட்டாளர்கள் தொழில் துவங்க ஏதுவாக பேராவூரணி பகுதியில் தென்னை சார்ந்த தொழில் பூங்கா அமைக்க வேண்டும். பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும். தென்னையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி நிறுவனம் (கே.வி.கே) பேராவூரணி பகுதியில் அமைக்க வேண்டும். தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ கட்டுப்படுத்துவதற்கான ஆய்வகத்தை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரிக்கு பதிலாக, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்க வேண்டும். பேராவூரணி நெட்டை தேங்காய்க்கு புவிசார் குறியீடு வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும். அக்னி ஆற்று நீர் பாசனத்தை ஆண்டிக்காடு, பள்ளத்தூர், பூவாணம் போன்ற பகுதிகளில் முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.