போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அகற்றம்
பாபநாசம், ஜுன் 10- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் மெயின் சாலையில், காவிரி பாலம் அருகில், சாலையின் நடுவில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மேல் நிலை நீர்தேக்கத் தொட்டி அகற்றப்பட்டது. மக்களின் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு மாற்றாக, அதன் அருகிலேயே புதிதாக நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, அது பயன்பாட்டிற்கு வந்த பிறகும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி இடித்து அப்புறப்படுத்தப்படாமல் இருந்தது. இதை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளின் கோரிக்கை தீக்கதிர் நாளிதழில் தொடர்ந்து வெளியானது. இதையடுத்து, திங்களன்று மக்களின் பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இடிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.