குமரி மாவட்டத்தில் மழையால் சாய்ந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்
ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உறுதி
நாகர்கோவில். மே. 25- குமரி மாவட்டத்தில் மழை மற்றும் சூறைக்காற்றால் சாய்ந்து போன வாழை மரங்கள், வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்திற்கும் உரிய நிவாரணம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு செய்து உறுதியளித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சி, ஞாலம் மற்றும் செண்பகராமன் புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா மே 25 ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. வானிலை அறிக்கையின்படி குமரி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வட்டங்களிலும் அனைத்துத்துறை அலுவலர்கள் வாயிலாக சேத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மே 23 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை இரு தினங்கள் மழையுடன் பலத்த காற்று வீசியதால் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சரிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகள், வாழைகள் உள்ளிட்டவைகள் சேமடைந்தன. சேதம் குறித்து கணக்கெடுப்பு மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு துறையினர் வாயிலாக மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்தியும், மின்சார வாரியம் சார்பாக முறிந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றியும், துண்டிக்கப்பட்ட மின்சாரம் சரிசெய்யப்பட்டு, மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வாழை உள்ளிட்ட விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தவற்றை குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று தோவாளை வட்டம் ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழை தோட்டங்கள் சேதமடைந்ததை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு, விவசாயிகளிடம் சேதம் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் சேத விபரங்கள் குறித்து கணக்கெடுக்கும்படி துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மரம் முறிந்து அருகாமையில் இருந்த வீட்டின் மேல் விழுந்து வீடு சேதம் அடைந்ததை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மரக்கிளையினை அகற்ற தீயணைப்பு துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சேதமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுத்து, நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து செண்பகராமன் புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பலத்த காற்றினால் மின்சார கம்பங்கள் முறிந்து சேதமடைந்தை நேரில் பார்வையிட்டு புதிய மின் கம்பங்களை அமைத்து பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கிட அறிவுறுத்தப்பட்டது. 170 மின்கம்பங்கள் சேதம் மே 23, 24 ஆகிய தினங்களில் வீசிய பலத்த காற்றினால் - விளவங்கோடு வட்டம், திருவட்டாறு வட்டங்களில் மொத்தம் 22 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அவற்றிற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பலத்த காற்றின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 49 மரங்கள் முறிந்து விழுந்து தீயணைப்புத் துறையினரால் அகற்றப்பட்டது. மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 170 மின்கம்பங்கள் சேதமடைந்து அதில் 140 மின்கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டது. மீதமுள்ள மின்கம்பங்கள் மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 7.5 ஹெக்டேரில் வாழை-ரப்பர் மரங்கள் சேதம் மேலும் பலத்த காற்றின் காரணமாக வாழை மற்றும் ரப்பர் மரங்கள் 7.5 ஹெக்டேர் அளவில் சேதமடைந்துள்ளது. சேதமடைந்துள்ள பயிர்கள் கணக்கீடு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், துறை அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.