திருநெல்வேலி, ஆக. 31- பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரே இந்தியா ஒரே மொழி ஒரே கல்வி உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன இவை ஜனநாயகத்திற்கு எதிரானதாகும் என நெல்லையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பேசினார். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்க புரவலரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார், மாநில துணைத்தலைவர் முபாரக் அலி வரவேற்று பேசினார் . நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல் டாக்டர் ராமகுரு, மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் காமராஜ் , வழக்கறிஞர் செல்வ சகாயம், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கலந்து கொண்டார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது- இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட வஉசி, ம.பொ.சி, பாரதியார் உள்ளிட்டோர் வாழ்ந்த பூமி திருநெல்வேலி. இங்கு வாழ்ந்த மகாகவி பாரதியார் தண்ணீர்விட்டோ வளர்த்தோம்? சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருக திருவுளமோ? என தீர்க்க தரிசனமாக பாடினார். கண்ணீர் விட்டு வளர்த்த சுதந்திரத்தை காப்பாற்ற சட்டத்தால் மட்டுமே முடியும். சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை சட்டக் கல்லூரி மாணவர்கள் தெரிந்து செயலாற்ற வேண்டும். அரசியலும் சட்டமும் வேறு வேறல்ல. அது இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்தது.
சுதந்திரம் பெறும் முன்பு பொதுவெளியில் அரசியல் பேச முடியாத சூழலில் அரசியல் ஊர்வலங்கள் நடத்த இயலாத காலங்களில் மத ஊர்வலத்திற்கும் இறந்தவர்களை கொண்டு செல்லும் ஊர்வலதிற்கும் அனுமதி மறுக்கப்படவில்லை. இதை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். சிருங்கேரி மடாதிபதி இந்து இஸ்லாம் ஒற்றுமை தான் தர்மம் என்று கூறினார். ஆனால் தற்போது நிலைமை அவ்வாறு இல்லை. ஒருவரை கைது செய்தால் எந்த காரணத்திற்காக கைது செய்கிறோம் என்று கூற வேண்டும். ஆனால் மக்களை மிசா, தடா, பொடா உள்ளிட்ட சட்டங்களில் எந்த காரணமும் இன்றி கைது செய்வது மற்றும் அவர்களுக்கு ஜாமீன் தர மறுப்பது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1975 ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்த நாள்களில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. இதற்கு பல்வேறு இடங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் அது திரும்பிப் பெறப்பட்டது, தற்போது அவசர நிலை பிரகடனம் செய்யப்படாவிட்டாலும் அதுபோன்ற சூழல் நிலவி வருகிறது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரே இந்தியா, ஒரே மொழி ,ஒரே கல்வி உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இவை ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். கண்ணீர் விட்டு வளர்த்த சுதந்திரத்தை கருகவிடாமல் பாதுகாப்பது சட்ட மாணவர்கள், சட்ட அறிஞர்கள் கையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.