லாபம் வரும் வண்டிகள் அனைத்தும் தனியாருக்கு. இழப்பு ஏற்படும் வண்டிகள் மட்டும் அரசுக்கு என்ற கொள்கையை அறிவித்துவிட்டு ரயில்வேயில் தனியார் மயம் இல்லை என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இல்லாமல் வேறென்ன?
மதுரை, மே 21- 2031 ஆம் ஆண்டுக்குள் அனைத்து சரக்கு ரயில்களும் தனியார்மயம் ஆகிவிடும் என்று நிதிநிலை அறிக்கையில் ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்ற ரயில்வே அமைச்சரின் அறிவிப்பு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதே என்று சு. வெங்கடேசன் எம்.பி., கடுமையாக விமர்சித் துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: சென்னை வந்த ரயில்வே அமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 5 ரயில் நிலையங்களை தமிழகத்தில் சீரமைக்க ரூ. 1700 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை வந்த ரயில்வே அமைச்சர் அறிவித் துள்ளார். இதில் எழும்பூர், இராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் அடங்கும். இந்த ரயில் நிலை யங்கள் போதிய வாகன நிறுத்த இடத்தோடு நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள் உட்பட வசதிகள் செய்யப்பட்டு தண்டவாளத்தின் இரு புறங்களிலும் வாசல் அமைக்கப்பட்டு ரயில் நிலையங்கள் மாற்றி அமைக்கப்படும் என்ற அறிவிப்பினையும், மதுரைக்கு ரூ. 376 கோடியில் அறிவிக்கப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன். அதே நேரத்தில் கன்னியாகுமரி ரயில் நிலைய முகப்பு விவேகானந்தர் மண்டப முகப்பு டன் மாற்றி அமைக்கப்படும் என்று வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. குமரி முனையின் பெருஞ்சிறப்பே முக்கடல் அலையினூடே முப்பால் அருளிய வள்ளுவ பேராசானின் பெரு வடிவமே. எனவே வள்ளுவர் சிலை வடிவ மைப்பையும் இணைத்து வைக்க வேண்டும் எனக் கோருகிறேன்.
ரயில்வே ஊழியர்களுக்கு கவசம் அளித்திடுக!
அதே நேரத்தில் ரயில்வே அமைச்சர் பாது காப்பு குறித்த விஷயத்தில் எல்லா ரயில் வண்டி களிலும் குறிப்பாக வந்தே பாரத் ரயிலிலும் மோதல் தவிர்ப்பு கவசம் என்ற கருவியை பொருத்துவதற்கு அறிவித்துள்ளதை வர வேற்கிறேன். அதே நேரத்தில் தண்டவாளத்தில் பணி செய்யும் ரயில்வே ஊழியர்களுக்கு ரட்சக் என்ற கவசத்தையும் அளித்து ரயில்வே ஊழி யர்கள் இறப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று கோருகிறேன்.
வடமாநில ஊழியர்களுக்கு தமிழ் பயிற்சி
ரயில்வே அமைச்சர் தமிழகத்தில் ரயில்வே யில் பணியில் சேர்ந்துள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கி றார். இது வரவேற்புக்குரியது. ஆனால் இது வெறும் ஆலோசனையாக இருந்து பயனில்லை. ஏற்கனவே பணியில் சேர்ந்துவிட்ட ஏராள மான வடமாநில ஊழியர்களுக்கு தமிழ் பயிற்று விப்பதற்கு ரயில்வே ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குறிப்பாக ரயில்வே பயிற்சிப் பள்ளி களில் முக்கியமாக திருச்சி பயிற்சி பள்ளியில் தமிழ் ஆசிரியரை நியமித்து இந்தி பேசும் ஊழி யர்களுக்கு கட்டாய தமிழ் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு அந்தக் காலம் பணிக் காலமாக கருதப்பட வேண்டும். அப்போது தான் ஊழியர்களுக்கு தமிழ் பயிற்சி கிடைக்கும். ஆர்வமும் வரும். அதை விடுத்து வெறும் அறி விப்பு எந்த பலனையும் தராது.
தனியார்மயத்தை கைவிடுக!
அமைச்சர் ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று அறிவித்திருப்பது முழு பூச ணிக்காயை சோற்றில் மறைப்பது ஆகும். ரயில்வே தேசிய ரயில் திட்டம் என்ற ஒன்றை அறிவித்திருக்கிறது; வெளியிட்டிருக்கிறது. இதனை நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக் கையில் அறிவித்தார். அந்தத் திட்டத்தில் 2031 ஆம் ஆண்டுக்குள் அனைத்து சரக்கு ரயில் களும் தனியார்மயம் ஆகிவிடும். இந்திய ரயில்வே வேகன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது. அதேபோல லாபம் வரக்கூடிய குளிர் சாதன இருக்கை மற்றும் 3 அடுக்கு படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மட்டும் கொண்ட விரைவு வண்டிகள் தனியாரி டம் ஒப்படைக்கப்படும் என்று அந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. லாபம் வரும் வண்டிகள் அனைத்தும் தனியாருக்கு. இழப்பு ஏற்படும் வண்டிகள் மட்டும் அரசுக்கு என்ற கொள்கை யை அறிவித்துவிட்டு ரயில்வேயில் தனியார் மயம் இல்லை என்று கூறுவது முழு பூச ணிக்காயை சோற்றில் மறைப்பது இல்லாமல் வேறென்ன? என்று கேட்க விரும்புகிறேன். அனைத்து வண்டிகளும் தனியார்மயம். ஆனால் பயணக் கட்டணம் உயரும். பயணிகள் பாதிக் கப்படுவார்கள். அத்துடன் ரயில்வேயின் நிரந்தர வேலை வாய்ப்புகள் பறிமுதலாகும். சமூக நீதி பாதிக்கப்படும். பொதுமக்கள் கட்டுப்படி யான ரயில் பயண வசதி இன்றி பாதிக்கப்படு வார்கள். அதே நேரத்தில் ரயில்வேயின் வரு மானம் இல்லாததால் ஊழியர்கள் சம்பளமும் ஓய்வூதியர்கள் ஓய்வூதியமும் பாதிக்கப்படும். எனவே ஒன்றிய அரசு தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்று கோருகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.