சென்னை,அக்.15- ஓடும் ரயில்முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபிசிஐடி காவலர்கள் விசாரணையை தொடங்கினர். சென்னை ஆலந்தூரிலுள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் சத்யா(20). தி.நகரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியில் குடியிருந்து வரும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளன் மகன் சதீஷ்(23). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே சத்யா பள்ளியில் படிக்கும் போதே சத்யாவை பின் தொடர்ந்து வந்துள்ளார். நாளடைவில் சதீஷ் மற்றும் சத்யா ஆகிய இருவரின் நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் சத்யா வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து தனது மகளை தாய் கண்டித்துள்ளார். அதன் பிறகு சதீஷ் உடனான நட்பை சத்யா துண்டித்துள்ளார். இதற்கிடையே சத்யாவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர். இந்த தகவல் சதீசுக்கு தெரிந்துள்ளது. இந்த நிலையில், சத்யா கல்லூரி செல்ல தனது தோழியுடன் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்ததும் சதீஷ் பின் தொடர்ந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தாம்பரத்தி லிருந்து பரங்கிமலை நோக்கி ரயில் வந்து கொண்டிருந்த போது சத்யாவும், அவரது தோழியும் ரயிலில் ஏறி செல்வதற்காக தயாராக இருந்தனர். ஆத்திரமடைந்த சதீஷ், சத்யாவை ஓடும் ரயில் முன்பு தள்ளி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை காவலர்கள் சென்னை துரைப்பாக்கம் அருகே கைது செய்து 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் 24 மணி நேரமும் கண்காணிக்க சிறைத்துறையினருக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, மகள் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் தந்தை மாணிக்கம் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் சத்யாவின் அம்மா ராமலட்சுமி புற்று நோய் பாதிப்பால் சிகிச்சைபெற்று வருகிறார். அவரை சந்தித்த காவல்துறை ஆணையர் ஆறுதல் கூறினார். இதற்கிடையே, தந்தை மாணிக்கம், மகள் சத்யா இருவரின் உடல்களும் உடற்கூராய்வு செய்த பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பழவந்தாங்கல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, ஆதம்பாக்கம் குடியிருப்பில் காவலர்கள் விசாரணையை துவக்கினர்.