பாதாள சாக்கடை அமைத்து தரக்கோரி சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் மனு
திருச்சிராப்பள்ளி, ஜுன் 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குப்பகுதிச் செயலாளர் ரபீக் அகமது தலைமையில் மேற்கு பகுதிக்குழு உறுப்பினர் ஷேக்மொய்தின் மாநகராட்சி மண்டலம் 5-உதவி ஆணையரிடம் மனு அளித்தார். அவர் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 27 இல் உள்ள தாசில்தார் சந்தில், பல காலமாக பாதாள சாக்கடை அமைக்கப்படாமல் உள்ளது. இப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளன. மேலும், இதில் கழிவுகள் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து அமல்படுத்தி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கூறியிருந்தார். உதவி ஆணையரிடம் மனுவை கொடுத்தபோது, மேற்கு பகுதிக்குழு உறுப்பினர் கயூம் மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் உடன் இருந்தனர்.