ஓட்டுநரைத் தாக்கிய போக்குவரத்துக் கழக அலுவலரை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜுன் 10- அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை மண்டலம் ஆரப்பாளையத்தில், ஓட்டுநரை செருப்பால் அடித்த அலுவலரை பணி நீக்கம் செய்யவும், கைது செய்யவும், அவரிடம் ஓட்டுநரை அழைத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தஞ்சாவூர் பணிமனையில் சா.செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கலந்து கொண்டு பேசுகையில், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலரை பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். சம்பவத்தை வேடிக்கை பார்த்த அலுவலர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், அரசு போக்குவரத்து மண்டல தலைவர் காரல் மார்க்ஸ், அரசு போக்குவரத்து மண்டலப் பொருளாளர் எஸ்.ராமசாமி, ஓய்வு பெற்றோர் அமைப்பு முன்னணி ஜீவா, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, அரசு விரைவுப் போக்குவரத்து சிஐடியு மத்திய சங்க துணைத் தலைவர் பி.வெங்கடேசன், பணிமனைத் தலைவர் டி.பரத்ராஜ், செயலாளர் ஏ.எஸ்.பழனிவேலு, அரசுப் போக்குவரத்து தஞ்சை புறநகர் கிளை பொருளாளர் ராஜசேகர் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.a