ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜுன் 7- புதிய பென்சன் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க காலக்கெடு நிர்ணயித்து, ஊழியர்களை நிர்பந்தப்படுத்துவதை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட டி.ஆர்.இ.யு சார்பில், வெள்ளியன்று ஜங்ஷனில் உள்ள தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஆர்.இ.யு. கோட்டத் தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். உதவி பொதுச்செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் முனிராஜ், கோட்டச் செயலாளர் கரிகாலன், உதவி செயலாளர் மருதுபாண்டி, ஓ.பி. கிளைத் தலைவர் மோகன்ராஜ், உதவி கோட்டச் செயலாளர்கள் ரஜினி, செந்தில்குமார், துணை பொதுச்செயலாளர் ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஜெனரல் கிளைச் செயலாளர் கவியரசன் நன்றி கூறினார்.