பரங்கிப்பேட்டை கடற்கரை புறம்போக்கு பகுதியில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு
சிதம்பரம், மே 25- சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சின்னூர் வடக்கு மற்றும் தெற்கு புதுப்பேட்டை, இந்திரா நகர் உள்ளிட்ட 4 கிராம பகுதிகளில் உள்ள கடற்கரை புறம்போக்கு இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வாழ்ந்து வரு கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் வசிக்கும் பகுதி வனத்துறையினருக்கு சொந்த மானது என வனத்துறையினர் இவர்களின் வீடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை யொட்டி புவனகிரி வட்டாட்சியர் அலு வலகத்தில் வட்டாட்சியர் சித்ரா வெங்கட் தலைமையில் வனத்துறையினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய், விவசாய சங்க பொருளாளர் ராமச்சந்திரன், மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய்த் துறை யினர் நிலத்தை அளவீடு செய்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் கேட்டுள்ளனர். அதற்கு பொதுமக்கள் வருவாய் துறை ஆவண குறிப்பேட்டில் இது கடற்கரை புறம்போக்கு என உள்ளது என கூறியும் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் தோல்வியில் முடிந்தது விரைவில் இதற்கு நீதி கேட்டு அனைத்து கிராம மக்களையும் ஒருங்கிணைத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.