“மனிதனுக்கு மிகவும் பிரியமானது அவனு டைய வாழ்க்கை! மனித வாழ்க்கை வாழ்வ தற்கே! ஆனால் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டால், பயந்தாங் கொள்ளி யாகவும், பயனற்றவனாகவும் வாழ்ந்தேன் என்று வெட்கத்துடன் தலைசாயும் நிலைமை வரக்கூடாது. அர்த்தமற்ற மனவேதனையுடன், சித்ரவதையுடன் வருடங்கள் உருண்டோடி விட்டனவே என கழிவிரக்கம் கொள்ளும் பிழைப்பு வேண்டாம்! என் வாழ்க்கை பூராவும் என் திறமைகள் அனைத்தையும் மனித சமு தாய விடுதலையென்னும் உலகிலேயே மகோன்னதமான இலட்சியத்திற்கே அர்ப்ப ணித்தேன் என்று கண்ணை மூடும் போது நினைக்கும்படி வாழ்வதுதான் மனித வாழ்க்கைக்குப் பெருமை அளித்திடும்”-ஆஸ்த்ரோவ்ஸ்கி ஆஸ்த்ரோவ்ஸ்கியின் அர்த்த அடர்த்தி மிக்க வார்த்தைகள் கருப்பு கருணாவுக்குப் பொருந்தியதால்தான் தான் இறப்பதற்கு முன் “ ஐ ஆம் எஸ்.கருணா, மெம்பர் ஆப் கம்யூ னிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா மார்க்சிஸ்ட்” என்னும் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு மறைந்தார். இவர் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க் கையை வாழ்ந்ததால்தான் ‘வர முடிந்தால் வந்துவிடுங்களேன் தோழர் கருப்பு கருணா’ என்று உளப்பூர்வமான அஞ்சலி உரையை வழங்கியுள்ளார் இ.பா. சிந்தன். இதையே நூலின் தலைப்பாக்கி கருணா குறித்த அஞ்சலி உரைகளின் தொகுப்பை உருவாக்கியுள்ளார் சிராஜூதீன்.
இந்நூலில் 34 தோழர்கள் கருப்பு கருணா வுடனான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இத்துடன் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின் இரங்கல் செய்திகளும் தொகுப்பா ளர் சிராஜூதீனின் தொகுப்புரையும், சில கவிதைகளும் முத்தாய்ப்பாய் கருப்பு கருணா வின் ‘ஒரு பெரும் கனவின் வெளிப்பாடு’ எனும் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. இந்நூல் கருப்பு கருணாவின் இறுதி வார்த்தைகளில் இழைந்த பெருமைக்குரிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வண்ணாமலை மாவட்ட மாநாட்டில் அனைத்து பிரதிநிதிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட் டது குறிப்பிடத்தக்கது. “நான் சுயமாக நிற்கவும் செயல்படவும் கற்றுக் கொண்டேன். கருணா தன்னை முழுமை யாக பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டதால் மொத்த குடும்ப பொறுப்புகள், முடிவுகள் என நானே எடுக்க அவர் கற்றுத் தந்தார்.” என்னும் கருணாவின் துணைவியார் செல்வியின் வார்த்தைகள் கருணாவுக்குப் புகழ் சேர்ப்பதோடு ஆண் கம்யூனிஸ்டுகள் தங்கள் வீட்டுப் பெண்களைப் பயிற்றுவிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவே உள்ளன. திருவண்ணாமலை மலைமேடுகளில் போலித் திருட்டு சாமியார் நித்யானந்தா தனது அடிப் பொடிகளைத் தூண்டிவிட்டு குடில்கள் அமைத்து மலையை ஆக்கிரமிக்க இருந்த திட்டத்தைத் தனது தோழர்களுடன் தவிடுபொடி யாக்கியிருக்கிறார் கருணா என்பதையும்; சமூக ஊடகங்களில் கருணா குறித்தும் அவரின் மகள் குறித்தும் மிரட்டல் பதிவுகள் இடுவதும், கொலை மிரட்டல்கள் விடுப்பது எனவும் வழக் கம் போல ஆட்டங்கள் ஆடிய நித்யானந்தா கும்பலிடமிருந்து மலையை மீட்டு அண்ணா மலையாருக்குத் திருப்பித் தந்த கருணா ஒரு நாத்திகர் என்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது.
பாப்பம்பாடி ஜமாவின் அதிரும் பறை யொலியில் எப்போதும் கருணா எழுப்பும் ஒலி யும் கலந்திருக்கும் என்பதைப் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் இரங்கல் உரை யில் காணமுடிகிறது. கருணாவின் இன்னொரு முகமாக நகைச் சுவை ததும்பும் நடவடிக்கைகள் இருந்துள் ளன. ‘‘காவியற்ற தமிழகம், சாதியற்ற தமிழர்’’, ‘‘கீழடி நம் தாய்மடி’’ போன்றவை கருணாவின் மூலமாகவே உருவானவை என்பதை இந்நூலைப் படிப்பதன் மூலம் உணர முடிந்தது. கோட்டைப்பட்டி கிராமத்தின் கலை இரவுக்காக திருவண்ணாமலையிலிருந்து கிளம்பும்போது பணமில்லாத கையறு நிலை யில் சமயோசிதமாய் கருணா பேருந்தில் மேளத்தை அடித்தபடியே மக்களிடமிருந்து பணம் வசூலித்த பாங்கினை இலட்சுமி காந்தன் தனது அனுபவப் பகிர்வால் உணர்த் தும் போது கருணா கள செயல்பாட்டாளராய் ஜொலிக்கிறார் எனின் மிகையன்று.
இறப்பிற்குப் பின் தன் உடலை மருத்துவ மனை ஆய்விற்குக் கொடுத்தது; உறவினர்கள் யாரும் எந்தச் சடங்குகளையும் தன் உடல்மீது செலுத்திவிடாதபடி தன் குடும்பத்தை அவ்வ ளவு துயரத்திலும் உறுதியுடன் இருக்க வைத்தது; அவரின் சவ ஊர்வலம் புறப்படும் முன்பு “யாரும் பூக்களைத் தூவி சாலையை மாசுபடுத்த வேண்டாம். அது கருணாவிற்குப் பிடிக்காது” என்று அந்தக் குடும்பம் அறி வித்தது போன்றவை எல்லாம் ஒரு நாளில் நடந்துவிட்ட ஒன்று அல்ல. தனது குடும்பத்தை ஒரு தோழர் எவ்வாறு உறுதியுடன் தயார் செய்துள்ளார் என்பதன் வெளிப்பாடுகள்தான் அவை என்று பிரளயன் கூறியிருப்பது பொருத்த மானதே.
இந்நூலில் சில ஆளுமைகள் கருணாவின் இயல்பான முரண்களைச் சுட்டிக் காட்டினா லும் “முரண்களோடு வாழ முடியும், தோழமை சேர முடியும், முன்னேறிக் காட்ட முடியும்-நோக்கம் உயர்வானதாக, சமுதாயத்துக்காக இருக்குமானால். அதற்கு நம்மோடு ‘வாழும்’ சாட்சிதான் கருணா” என்னும் அ.குமரேசனின் வார்த்தைகள் கருணாவின் யதார்த்த வாழ்வின் வெற்றியைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. “முகநூல் வெளியில் தனக்கென பல்லா யிரக்கணக்கில் பின்தொடர்பவர்களை, கிட்டத் தட்ட 26,000 பேர் வரை கொண்டிருந்தவர் கருணா. அவரது கூர்மையான எழுத்தும், பேச்சு பாணியிலான நகைச்சுவையும், அவ ருக்கென தனித்த வகையிலான பின் தொடர்பு களை அதிகரித்தன” என்னும் ஸ்ரீரசாவின் வார்த்தைகளிலிருந்து கருணாவின் முகநூல் மேன்மையை உணர முடிகிறது. “பொது நிகழ்வுக்கு வசூல் பண்றப்போ கூச்சமே படக்கூடாது தோழா.. மக்கள் கிட்ட காசு வாங்கிதான் தோழா நிகழ்ச்சி நடத்தனும்” எனும் கிருஷ்ணமூர்த்தியின் பதிவு மூலம் உண்டி குலுக்கிகள் கம்யூனிஸ்டுகள் என் பதை கருணா நினைவுபடுத்தியுள்ளார். பவாவின் ‘ஏழுமலை ஜமா’ வை கருணா படமாக உருவாக்கினார் என்பதை விட மு. பாலாஜி கூறியுள்ளதைப் போல மக்களிடம் வசூலித்து உருவாக்கப்பட்ட படம் நாமறிந்த வகையில் இது ஒன்றுதான் என்னும்போது மெய் சிலிர்க்கிறது.
இந்நூலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோ ரின் புகழுரைகள் சிறப்பு மிக்கவை. அற்புதமான தோழரின் இழப்புக்குக் காரண மான புகைக்கும் பழக்கத்தை முன்னிறுத்தி “ஓர் இலட்சியத்துக்காக நம் உடல், பொருள், ஆவியை இயக்கத்துக்கு அளித்துவிட்ட வர்கள் தம் உடலைப் பேணுவது ஓர் ஸ்தா பனக் கடமை என்று நம் முன்னோடிகள் சொல்லு வார்கள். இந்த உடல் உனக்கானதில்லை. இயக்கத்துக்கானது என்பார்கள். அச்சொற் களை தோழர்கள் மதிக்க வேண்டும். உடலைப் பேண வேண்டும். கருணாவின் பாதியில் முடிந்த வாழ்வு நமக்குச் சொல்லும் பாடம் அது” எனும் ச. தமிழ்ச்செல்வனின் வார்த்தைகள் முக்கியமானவை. இந்நூலை வாங்கிப் படிக்க வேண்டி யதும் தத்தம் வாழ்க்கையில் பொருத்திப் பார்த்து முன்னேற வேண்டியதும் முற்போக்கா ளர்களின் மகத்தான கடமை.
வர முடிந்தால் வந்துவிடுங்கள் தோழர்
நினைவுக் கட்டுரைகள்
தொகுப்பு : சிராஜூதீன்
பக்கங்கள் : 232; விலை : 225
கிடைக்குமிடம்:
7 இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 018.