அரசியல் விளக்க பொதுக்கூட்டம்
திருச்சிராப்பள்ளி, மே 15- திருச்சி புறநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பேட்டை ஒன்றியம் மேட்டுப்பாளையம் பகுதி கிளைகள் சார்பில் புதனன்று மேட்டுப்பாளையத்தில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் காமராஜ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், பாலகுமார், மூத்த தோழர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் யசோதா ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கிளைச் செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.
திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 16 ஆவது ஆண்டு விழா
திருச்சிராப்பள்ளி, மே 15- திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் பொறியியல் கல்லூரியின் 16 ஆவது ஆண்டு விழா, கல்லூரி வளாகத்தில் வியாழனன்று நடைபெற்றது. இதில் சி.எஸ். மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் அனந்தகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கல்வி சாதனைகள், விளையாட்டு சாதனைகள், சிறந்த வெளிச்செல்லும் மாணவர்கள், சிறந்த ஆசிரியர் மற்றும் சிறந்த துறைக்கான பரிசுகளை வழங்கி பாராட்டினார். முன்னதாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாந்தி 2024-25 ஆண்டு அறிக்கை வாசித்தார். மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
பெரம்பலூர், மே 15- பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பெரம்பலூர் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தலைமை தாங்கினார். கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் மற்றும் துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் பத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மின் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனுகொடுத்தனர். அதில் பெரம்பலூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள ரெங்கா நகரில் அடிக்கடி மின்தடையும், மின்னழுத்த தாழ்வும் ஏற்பட்டு வருவதால், அப்பகுதியில் புதிய மின் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா, அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சீரான மின்வினியோகம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் வாய்ப்பு இருப்பின் அப்பகுதிகளில் சர்வே செய்து மின்மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில், மின்வாரிய மக்கள் தொடர்பு அலுவலர் காயத்ரி, பெரம்பலூர் மின்கோட்ட உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணியில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடக்கம் மே.20 இல் குடிகள் மாநாடு
தஞ்சாவூர், மே 14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி, தனித்துணை ஆட்சியர் (முத்திரைக்கட்டணம்) கோ.பூஷண குமார் தலைமையில் நடந்தது. பேராவூரணி தாலுகாவில் வருவாய் தீர்வாய கணக்குகள் தணிக்கையானது (ஜமாபந்தி நிகழ்ச்சி) புதன்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு, தனித்துணை ஆட்சியர் (முத்திரைக்கட்டணம்) கோ.பூஷண குமார் தலைமை வகித்தார். இதில், வட்டாட்சியர் என். சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் கவிதா, மண்டல துணை வட்டாட்சியர் அருண், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜமாணிக்கம், கூடுதல் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் பல்வேறு அரசுத்துறைகளின் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி, வருகிற 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதன்கிழமை பெருமகளூர் சரகத்திற்குபட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். மே.15 (வியாழக்கிழமை) குருவிக்கரம்பை சரகத்திற்கும், மே.16 (வெள்ளிக்கிழமை) ஆவணம் சரகத்திற்கும், மே.20 செவ்வாய்க்கிழமை பேராவூரணி சரகத்திற்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு ஜமாபந்தி நிறைவாக, குடிகள் மாநாடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, பேராவூரணி தாலுகாவிற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் வருவாய் தீர்வாய நாட்களில் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து தீர்வு காணலாம் என பேராவூரணி வட்டாட்சியர் என்.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூரில் இன்று அரசு போட்டித் தேர்வுக்கான மாதிரித்தேர்வு பயிற்சி
தஞ்சாவூர், மே 15- தஞ்சாவூர் அறிவுசார் மையம், மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் குரூப்-4 அரசுத் தேர்வுக்கு மே.16 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின், பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4க்கான தேர்வு, வரும் ஜூலை.12 அன்று நடைபெற உள்ளது. அரசுப் பணிக்கு காத்திருக்கும் லட்சக்கணக்கானவர்கள் இந்த தேர்வை எழுத இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல பயிற்சி மையங்களிலும், தனியாகவும் மாணவர்கள் ஆர்வத்தோடு பயின்று வருகிறார்கள். தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் அறிவுசார் மையங்களிலும் நூற்றுக்கணக்கானவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, தஞ்சாவூர் மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் 300-க்கும் மேற்பட்டவர்களும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 200 பேரும், பட்டுக்கோட்டை மையத்தில் நூறு பேரும் இந்த மாதிரித் தேர்வை எழுத உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரையும் தேர்வுபெறச் செய்ய, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் அனைவரையும் ஊக்கப்படுத்தி வருகிறார். தேர்வர்களுக்கு அனைத்துவித உதவிகளையும் வழங்கிட மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், அறிவுசார் மைய நிர்வாகிகள் மற்றும் கல்வி அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். தேர்வு எழுத உள்ள அனைவரும் சிறந்த பயிற்சியை பெறும் வகையில் (16.05.2025 வெள்ளியன்று) மூன்று மையங்களிலும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள் முழு திறத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர் தேர்வாக நடைபெற உள்ள இந்த மாதிரித் தேர்வின் முதல் தேர்வு 16.05.2025 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தேர்வில் அனைவரும் பங்கேற்க மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கா.பரமேஸ்வரி, தஞ்சாவூர் அறிவுசார் மைய மதியுரைஞர் பேராசிரியர் வெ.சுகுமாரன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.