tamilnadu

img

மருந்துகளைத் தடுக்கும் - கோவி.பாலமுருகு

பூங்காவில் விளையாடு கண்ணே-அங்கே
    பூத்திருக்கும் அழகுமலர்ப் பெண்ணே!
ஏங்கிமனம் பறித்திடவே எண்ணும்-அதை
     ஏற்றுமலர்ப் பறிக்காதே  பெண்ணே!

விளையாட சறுக்குமரம் இருக்கும்-மகிழ்ச்சி
   விளையாடி சருக்குவதில் கிடைக்கும்! 
அலைபோல ஊஞ்சலிலே ஆடு -அதில்
    ஆடும்போது இன்பமெழப் பாடு!

சுற்றுகின்ற நாற்காலி இருக்கும்-அதில்
   சுற்றும்போது தலைசுற்றிக் கிறுக்கும்!
பற்றிடவே தொங்குகுழாய் இருக்கும்-அதைப்
    பற்றியெழ கையுடலும் வலுக்கும்!

கலைபேசும் சிலைபலவும் இருக்கும்-அந்தச்
     கற்சிலையும் உனைக்கண்டால் சிரிக்கும்!
விளையாடப் பலபொருள்கள் இருக்கும்-அதில்
    விளையாட மனத்திலின்பம் பெருக்கும்!

நடைப்பயிற்சி செய்யுமிடம் இருக்கும்-அதில்
   நடந்துவர நோய்வராது தடுக்கும்! 
உடலெடையைக் குறைத்துநலம் சேர்க்கும்-அது
  உண்ணுகின்ற  மருந்துகளைத் தடுக்கும்!