பெட்ரோல், டீசல் விலை உயர்வு எல்லையைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. எரிவாயு சிலிண்டர் விலை மூன்று நாட்களுக்கு ஒரு முறை உயருகிறது. அநேகமாக ஜூன் ஒன்றாம் தேதி முதல் உணவகங்களில் இட்லி, தோசை, பரோட்டா உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை 25 சதவீதம் உயரும் என்ற தகவல் கசிந்து கொண்டிருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் தினம்தோறும் இட்லி, பணியாரம், ஆப்பம், இடியாப்பம் விற்பவர்களை தினம் தோறும் பார்க்க முடிகிறது. இவர்களில் பலர் தாங்கள் வைத்திருந்த வாகனங்களை விற்றுவிட்டு சைக்கிளுக்கு மாறிவிட்டனர். இதனால் இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.6,000 மிச்சம். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டி.லிங்கபெருமாள். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர் சென்னையில் ஆதம்பாக்கம், உள்ளகரம்-புழுதிவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் காலை மற்றும் மாலை இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்து இடியாப்பம் விற்று வந்தார். தினமும் ரூ.200 பெட்ரோல் செலவு. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தொடும் முன்பே, எரிபொருளுக்காக மாதம் ரூ.6,000-க்கு மேல் செலவழித்து வந்துள்ளார். தற்போது தனது இருசக்கர வாகனத்தை விற்றுவிட்டு சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். யுடியூப் சேனல்களைப் பார்த்து தனது சைக்கிள் பேட்டரி மூலம் இயங்குவதற்கு ரூ.15,000 முதலீட்டில், சீனாவில் தயாரிக்கப்பட்ட டி.சி. மோட்டார், ரீச்சார்ஜபிள் லித்தியம் பேட்டரி மற்றும் சில மின் உதிரி பாகங்கள் ஆகியவற்றைப் பொருத்தி தனது சைக்கிளை இ-வாகனமாக மாற்றிவிட்டார். ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 கிமீ பயணம் செய்யலாம். இதன் மூலம் பெட்ரோல் செலவில்லை. சைக்கிளில் பேட்டரியை பொருத்தியதன் மூலம் எரிபொருள் விலை உயர்விலிருந்து தப்பித்து “நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளேன்” என்கிறார். ஒருவர் மாறிவிட்டார். ஊரே மாற முடியுமா? மாறவும் வேண்டும். இதற்கு காரணமானவர்களை மாற்றவும் வேண்டும்.