அசூர் கிராமத்தில் கிரஷர் குவாரி அமைக்க மக்கள் எதிர்ப்பு
பெரம்பலூர், ஜுன் 13- பெரம்பலூர் அருகே, அசூர் கிராமத்தில் கிரஷர் குவாரி அமைக்க அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர், துணை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், அசூர் கிராம பொதுமக்கள் சார்பில், துணை ஆட்சியர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் பாரதிவளவனிடம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: அசூர் கிராம பொதுமக்கள் அதிகளவில் விவசாயத்தை நம்பியே உள்ளனர். அதிகளவில் விவசாய நிலப்பரப்பு உள்ள பகுதியின் மத்தியில் கிரஷர் குவாரி அமைத்து கல் உடைப்பது, எம். சாண்ட் மணல் தயாரிப்பு போன்றவற்றை மேற்கொள்ள தனி நபர் ஒருவர் திட்டமிட்டு அதற்கான அனுமதி வேண்டி விஏஓ, தாசில்தார், ஊரக வளர்ச்சித்துறை, கனிமவளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அலுவலகங்களில் விண்ணப்பித்துள்ளார். வேளாண் விளைநிலம் அருகே குவாரி அமைத்தால், விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் வீணாகி தண்ணீரை குடிநீராக பயன்படுத்த முடியாமலும், இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படும். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும். எனவே, விவசாயிகள் நலன் கருதியும், விவசாயத்தை பெருக்கும் வகையிலும் அசூர் கிராமத்தில் கிரஷர் குவாரி அமைக்க அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.