அழகிய நதிகளின் கரைகளில் தான் நாகரிகம் உருவானது. வளமான நிலம், குடிநீர், மீன் பிடித்தல், வேட்டையாடுதல் இவற்றிற்கு ஆதாரமாக நதிகள் இருந்தன. காவிரி நதியின் பகுதிகளில் இப்படித்தான் கிராமங்கள் உருவாகியிருந்தன. மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதியில் பல கிராமங்கள் இருந்தன. அதில், ஏமனூர் கிராமமும் இருந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஏன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான கிராமம் என்கிறார்கள். ஏமன் என்பவர் குடியேறியதால் ஏமனூராக பெயர் பெற்றதாக செவி வழிச் செய்திகள் உள்ளன. மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு அணையின் இன்றைய நீர் பிடிப்புப் பகுதியில் பல கிராமங்களும், விவசாய நிலங்களும் இருந்தன. அணையைக் கட்டி முடித்த தருணத்தில் அங்கிருந்த கிராம மக்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். ஏமனூர் கிராம மக்களை அணையின் நீர் பிடிப்புப் பகுதியைத் தாண்டி மேடான பகுதியில் 1930களில் குடியமர்த்தினர். குடியமர்த்தப்பட்ட பகுதியை ஒட்டி 840 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை காட்டி அதில் விவசாயம் செய்து கொள்ளுமாறும் அதிகாரிகள் கூறினர். மேட்டூர் அணையைக் கட்ட நிலத்தையும், வீடுகளையும் விட்டு வந்த மக்கள், அரசு அதிகாரிகள் குடியமர்த்திய இடத்தில் வீடுகளை கட்டிக் கொண்டும், புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தி சாகுபடியும் செய்தும் வந்தனர். படிப்படியாக புதியதாக உருவான ஏமனூருக்கு மாநில அரசு சாலை அமைத்துக் கொடுத்தது, இன்று பென்னாகரத்தில் இருந்து ஏமனூருக்கு அரசு பேருந்து சென்று வருகிறது. தெருவிளக்குகள் அமைத்ததுடன், வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுத்தனர். கோவில்
கட்டப்பட்டது, அரசு பள்ளிக்கூடம் கட்டப்பட்டு, எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது. குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு குழந்தைகள் பராமரிக்கப்படு கின்றனர். வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 1176 வாக்காளர்கள் ஏமனூரில் உள்ளனர். நியாய விலைக் கடை கட்டப்பட்டுள்ளது. 424 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையில் 2000 மக்கள் தொகை கொண்ட ஊராக ஏமனூர் இன்று வளர்ச்சி பெற்றுள்ளது. மீன்பிடித்தல், ஆடு, மாடு மேய்த்தல், பால் உற்பத்தி என ஏமனூர் மக்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இன்று ஏமனூரில் 500 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றன.
அணைக்குள் உள்ளது முன்னோரின் கிராமம்
ஊர் தர்மகர்த்தா மா.கோவிந்தன் கூறும் போது “எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த கிராமம் மேட்டூர் அணைக்குள் இருந்தது. இன்றும் அங்கு ஆட்டுக்கல், அம்மிக்கல், வீட்டு சுவர்களின் படிமங்கள், தெருக்களின் வடிவமைப்பை நீங்கள் பார்க்க முடியும். அனுமந்தராயன் கோவிலின் மிச்சமும் தண்ணீருக்கு அடியில் உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு கீழே சென்றால் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை வெளியே தெரியும். மேட்டூர் அணை கட்டும்பணி நடைபெற்ற காலத்தில், அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்த கிராமங்களின் மக்களை, மேடான பகுதிகளில் குடியமர்த்தி னார்கள். எங்கள் முன்னோர்களை இங்கே கொண்டு வந்து குடியமர்த்தியதோடு, இப்பகுதிகளில் இருந்த நிலங்களில் சாகுபடி செய்து கொள்ளவும் கூறினார்கள். நான்கு தலைமுறைகளாக பாடுபட்டு மேடு பள்ளங்களை நிரவி, விவசாய பூமியாக்கி சாகுபடி செய்து வருகிறோம். கஷ்டப்பட்டு வீடுகளை கட்டி ஏமனூர் கிராமமாக சுமார் 2000 பேர் வாழ்ந்து வருகிறோம். இப்போது எங்களை ஊரை விட்டு காலி செய்யச் சொல்லி வேறு இடத்திற்கு போய் விடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். நாங்கள் எங்கே போவது? இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏமனூரை காலி செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என ஊர் தர்மகர்த்தா வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
வட்டாட்சியர் கொடுத்த பட்டா செல்லாதாம்
ஏமனூர் கிராமத்தை பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஊர் மக்களும், அருகில் உள்ள கிராம மக்களும் பேரணியாக சென்று தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாட்சியரிடம் முறையிட்டனர். 1997 ஆம் ஆண்டு அன்றைய பென்னாகரம் வட்டாட்சியர் எமனூர் மக்களுக்கு 464 வீட்டுமனை பட்டாக்களை போட்டு கொடுத்துள்ளார். வீட்டுமனை பட்டா வைத்துள்ள 65 பேருக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு வீட்டுக்கு தலா 3.5 லட்சம் ரூபாய் வீதம் 65 வீடுகள் கட்டிக் கொள்ள வந்த ஒதுக்கீட்டை ஏமனூர் மக்களுக்கு தர இயலாது என்று வட்டாட்சியர் கூறினார். 27 ஆண்டுகளுக்கு முன்பு இதே பென்னாகரம் வட்டாட்சியர் தானே வீட்டுமனை பட்டா கொடுத்தார் என்று கேட்டால் அந்த பட்டாவெல்லம் செல்லாது. இனிமேல் ஏமனூருக்கு அரசு சலுகைகள் எதுவும் கிடைக்காது. அரசின் திட்டங்களும் இனி ஏமனூருக்கு தர மாட்டோம் என்று வட்டாட்சியர் கூறுகிறார். தற்போது மின் இணைப்பு தர மறுக்கின்றனர். கிராம வருவாய் அலுவலர் சான்றிதழ் தர மறுக்கிறார்.
கைவிரிக்கும் ஆட்சியர்; அலைக்கழிக்கும் வருவாய்த்துறை, வனத்துறை
இந்நிலையில், தர்மபுரி மாவட்ட ஆட்சியரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், ஏமனூர் கிராம ஊர் பிரதிநிதிகளுடன் சென்று பேசினார்கள். “நான் ஒன்றும் செய்வதற்கில்லை. ஊரில் உள்ள இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தம் என்று கூறுகிறார்கள். எனவே, நீங்களாகவே ஊரை காலி செய்து கொள்ளுங்கள்” என்று மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். மேட்டூர் அணை கட்டும்போது எங்கள் முன்னோர்களை அன்றைக்கு சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த எப்.எல். பிரிக்ஸ்டோக் என்பவரின் உத்தரவின் பேரில் குடியமர்த்திய இடத்தில் 100 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் எங்களின் ஏமனுரை காலி செய்ய செல்வதை நாங்கள் ஏற்க முடியாது என்று உறுதிபட கூறிவிட்டனர். இந்நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக்கூறி வனத்துறையினர் முள் செடி நடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு புறம் வருவாய்த்துறையும், மறு புறம் வனத்துறையும் இக்கிராம மக்களை அலைக்கழித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நான்கு லட்சம் கன அடி தண்ணீர் வந்த போதும் ஏமனூருக்கு தண்ணீர் வரவில்லை. மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவை எட்டினால் எங்கள் ஊருக்கு அரை கிலோ மீட்டருக்கு முன்னாலயே தண்ணீர் நிற்கிறது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையும் காலத்தில் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் முழுவடை சாகுபடி செய்கிறோம். காவிரியில் மீன் பிடிக்க உரிமம் பெற்று மீன்பிடிக்கிறோம். அணைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்திய இடத்திலிருந்து 100 ஆண்டுகள் கழித்து, அரசே காலி செய்ய முயற்சிக்கலாமா? யானைத் தடமா? அரசு காட்டிய நிலத்தில் சாகுபடி செய்து வருகிறோம். அந்த நிலத்தில் இனி பயிர் செய்யக்கூடாது, ஆடு, மாடுகளை மேய்க்கக் கூடாது என்ற மிரட்டுகிறார்கள். இப்போது புதிதாக யானை வழித்தடம் என்று கூறுகின்றனர். ஏமனூருக்கு எப்போதும் யானை வந்ததே இல்லை என்று ஊர் கவுண்டர் அசோகனும், ஜெயலட்சுமியும், சிபிஐஎம் செயலாளர் முருகன் மற்றும் ஊர் மக்களும் கூறுகின்றனர். மேட்டூர் அணை கட்ட நிலத்தையும், ஊரையும் காலி செய்த மக்களின் வாரிசுகளை, அரசே குடியமர்த்திய இடத்தில் இருந்து இப்போது வெளியேற்ற முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது. 100 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட ஏமனூர் கிராமத்தை பாதுகாத்திட தமிழக முதலமைச்சர் தலையிட