tamilnadu

பார்த்திபன் என்றாலே வேற லெவல்தான்போல...

“இரவின் நிழல்”- இது இயக்குநர் பார்த்திபன் உருவாக்கியிருக்கும் சிங்கிள் ஷாட் படம். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட சாதனைப் படமான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஞாயிறன்று நடந்த இதில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார். 

நிகழ்ச்சியின்போது மைக் சரியாக வேலை செய்யவில்லை என்று கோபங்கொண்ட பார்த்திபன் மைக்கைப் பிடுங்கி எறிந்தாராம். தொடர்ந்து அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மைக் வேலை செய்யாததால் இப்படி நடந்து கொண்டுவிட்டேன். நிச்சயம் இது அநாகரீகமான செயல் என்றெல்லாம் அவர் பேசினார்.

ஆனாலும் இது பெரிதுபடுத்தப்பட்டதால் அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தூக்கிப்போட்டது மைக்தான். ஆனால், உடைந்தது என்னவோ எனது மனது. கடந்த பல மாதங்களாக எனக்கு உறக்கமில்லை. கடந்த மூன்று நாட்களாகச் சுத்தமாக உறக்கமில்லை. 

என்ன நடந்தது எனத் தெரியாமல் நடந்துவிட்டது. எனக்கு நிறைய டென்ஷன். இதை நியாயப்படுத்த விரும்பவில்லை. நடந்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அவர் வீசியெறிந்த மைக் ரோபோ சங்கர் மீது விழுந்ததாகவும் அவரிடமும் பார்த்திபன் மன்னிப்புக் கோரினார் என்றும் தெரிகிறது. இதனிடையே பார்த்திபனின் இரவின் நிழல் படத்தைத் தமிழ் சினிமாவின் கலங்கரை விளக்கம் என்று இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.