பெற்றோர்க்கு வயதானால் போற்றிட வேண்டும் -நீ
பெற்றெடுத்த பிள்ளையென ஏற்றிட வேண்டும்!
பற்றிவிட்ட நோய்கண்டு மாற்றிட வேண்டும்-நோய்
பற்றாமல் மருந்துகொண்டு தேற்றிட வேண்டும்!
உடம்பைத் தொட்டவுடன் மகிழ்ச்சி கொள்வார்-கை
படலால் அவருடலில் நெகிழ்ச்சி கொள்வார்!
விடாத கருணையால் மகிழ்ச்சி கொள்வார் -நீ
தொடாவிடில் உலகோர் இகழ்ச்சி கொள்வார்!
உன்குழந்தை எனநினைத்து உணவை ஊட்டு-உடல்
இன்பமுற வெந்நீரில் குளியல் காட்டு!
துன்பமற சொல்லுவதைக் காதால் கேட்டு-அவர்
இன்பமுற செயல்படுத்தி இன்பம் கூட்டு!
குழந்தைகளை அவர்களிடம் அனுப்பி வைப்பாய்-அங்கே
குழந்தையாய் மாறுமவர் சிரிப்பைக் காண்பாய்!
எழவைக்கும் பெயரர்களின் அழைப்பில் மகிழ்வார்-அதில்
விழைந்திடுமே நோயெதிர்ப்பு பிழைத்து மீள்வார்!
மலத்துடனே சிறுநீரும் பாயில் கழிப்பார்-அவர்
மாறியதோ நினைவிழந்த நோயில் இருப்பார்!
சளைக்காமல் சுத்தத்தைச் செய்தே அதைப்பார் -உனைச்
சார்ந்திருக்கும் அவருனக்கு முத்தம் அளிப்பார்!