tamilnadu

img

சிவகங்கை முக்குடி ஊராட்சியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து சாதனை

சிவகங்கை, ஜூலை 17-  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் முக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருவதாகவும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு அடுத்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா தெரிவித்தார். இதுகுறித்து முக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் முத்தையா கூறுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊராட்சியில் 950 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறோம். இந்த வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு தினந்தோறும் அரசு நிர்ணயித்துள்ள கூலி ரூ.280 வழங்கி வருகிறோம். இத்திட்டத்தில் முக்குடி ஊராட்சியில் தரிசாகக் கிடந்த ஐந்தரை ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறோம்.நல்ல பலன் தரும் மரங்களும் வளர்க்கப்பட்டு வருகிறது.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் பொறியாளராகப் பணியாற்றிய செல்வகுமார்தான்  இச்சிறப்புக்கு காரணமாவார். பொறியாளர் செல்வக்குமார் கட்டுப்பாட்டில் 6 ஆறு ஊராட்சிகள் இருந்தன. அதில் முக்குடி ஊராட்சியும் ஒன்றாகும்.அவர் பணியாற்றிய காலத்தில் அவருடைய செயல்பாடுகள் எங்களை உற்சாகமூட்டியது. நூறுநாள் வேலைசெய்யக்கூடியவர்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள முழுச்சம்பளம் வழங்குவதற்கு அவர்தான் காரணமாக இருந்தார். அதுபோக தரிசு நிலங்களில், கண்மாய் பகுதிகளில் மரங்கள் வளர்த்து ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்குவதற்கு பொறியாளர் செல்வகுமார் வழிகாட்டி செயல்படுத்தினார். இத்திட்டத்தை துவக்கும்போது சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி வருகை புரிந்து மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை நன்கு செயல்படுத்துவதற்கு என்னென்ன உதவிகள் வேண்டுமென்றாலும் நான் செய்து தருவேன் என்று அந்த கூட்டத்தில் ஆட்சியர் பேசினார். தற்போது 10 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்ந்து பசுமையாக இருக்கிறது.இப் பகுதி முழுவதும் பசுமை நிறைந்த பகுதியாக மாறியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன்  வருகை புரிந்து மரம் வளர்க்கும் திட்டத்தை பார்வையிட்டு வாழ்த்தினார். சிறப்பாக செய்வதாக பாராட்டினார். அப்போது தண்ணீர் வசதி வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தோம். இரண்டு போர்வெல் போடுவதற்கு நிதிஉதவி தருவதாக அவர் கூறினார். தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் கன்றுகள் பாதிக்கப்படுமோ என்று அச்சத்துடன் உள்ளோம். 

தலைச்சுமையாக நீர் எடுத்து வந்து செடிகள் வளர்ப்பு 

முக்குடி ஊராட்சி பறையன் குளத்திலுள்ள தர்ம தோரணை ஊரணி, செங்குளத்தில் உள்ள அய்யா ஊரணி, அம்மன் கோயில் ஓரணி, கோனார் ஊரணி, நல்ல தண்ணீர் ஊரணி ஆகிய ஊர்களில் ஊரணி, கண்மாய்களை மேம்படுத்தி மரக்கன்றுகள் வளர்த்து வருகிறோம். 13 ஏக்கர் பரப்பளவுள்ள மயானத்தில் மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கு முக்கிய தேவையாக இருக்கும் தண்ணீர் அத்தியாவசியமாக உள்ளது. தண்ணீர் வசதி நீண்ட தூரத்திலிருந்து தலைச்சுமையாக எடுத்து வந்து வளர்க்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வருகிறோம். புளிய மரக் கன்று, வேப்பமரக் கன்று என ஐம்பது வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடி ஊராட்சியாக இருக்கக்கூடிய முக்குடி ஊராட்சி விருதுநகர் மாவட்ட எல்லையில் இருக்கிறது. 14வது நிதிக்குழு நிதியை அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊராட்சி நிர்வாகத்திலிருந்து மாற்றுவதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் ஊராட்சிமன்ற நிர்வாகம் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வெற்றி பெற்றோம். அந்த அடிப்படையில் ரூ.19 லட்சத்துக்கான பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளன. மரக்கன்று வளர்க்கும் திட்டத்திற்கு மண்புழு உரம் தயாரித்து உரமாக பயன்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். மரக்கன்று வளர்க்கும் சிறப்பு குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்புவனம் ஒன்றியத்தின் தலைவர் ஈஸ்வரன், ஒன்றிய துணைச் செயலாளர் சின்னகண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி ஆகியோர் இத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக நேரில் பார்வையிட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இத்திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்துகிற ஊராட்சி மன்ற தலைவர் முத்தையாவையும் கிராம மக்களையும் பாராட்டி வாழ்த்தினர். மாவட்ட ஆட்சித் தலைவரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் தண்ணீர் வசதிக்காக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா தெரிவித்தார்.