நவகவி
பஞ்சமப் பெண்ணே - காதல்
கொண்டவன் நானு!
கண்ணிமை அல்ல -அது
கத்தரிக் கோலு!
(பஞ்சமப்)
பண்ணை வயலோடு - பாடு
படுவதுன் பாடு!
காதல் பயிர் செய்வேன் -நீயும்
கன்னி வயற் காடு!
சேரியிலே நீ பூத்தாலும் - என்
ஊர் வரை வீசும் உன் வாசம்!
ஊரின் வேலி தாண்டுவேன் தேவி!
பூட்டுவேன் பொன் தாலி- என்
இன்னொரு அம்மா நீ!
(பஞ்சமப்)
மாட்டுக்கறி ருசியா? -அடி
மங்கை உன் வாய் ருசியா?
ஊட்டு சாப்பிடுவேன் -அது
தீட்டு என்றால் சரியா?
வயலின் வாசம் உன் உடம்பில்!
வாழ்வின் வாசம் உன் மனதில்!
சினிமா பாட்டு அல்ல நீ !
தெம்மாங்குப் பாட்டு - காதல்
கருணையைக் காட்டு!
(பஞ்சமப்)
சேரி அழுக்கடியோ- உன்
சிந்தை வெளுப்படியோ!
ஊரின் நடுவினிலே - உன்னை
குடி வைப்பேனடியோ! - கரு
மாரி குடி கொண்டாள் மந்தையிலே!
மானே குடிகொள் என் சிந்தையிலே!
கருப்புத் தங்கம் உனது அங்கம்!
நீயே ஆபரணம்! - எனக்கு
எதற்கு காசு பணம்?
(பஞ்சமப்)