tamilnadu

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர் முழுமையாக பங்கேற்க முடிவு

கோவை, பிப்.21-  சிஐடியு பஞ்சாலை சம்மேளன மாநிலக் குழு கூட்டம் கோவை காட்டூர் மில் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநில உதவித்தலைவர் எம்.சந்திரன், பஞ்சாலை சங்க மாநில பொதுச்செயலாளர் எம்.அசோகன் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மார்ச் 28, 29 அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பஞ்சாலை தொழிலாளர்களை முழுமையாக பங்கேற்கச் செய்வது மார்ச் 10 ந் தேதி வேலைநிறுத்த நோட்டீஸை அரசுக்கும், ஆலை நிர்வாகங்களுக்கும் வழங்குவது, டெக்ஸ்டைல் அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழு ஸ்தாபன மாநாடு கோவையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. என்டிசி பஞ்சாலைகள் 2020 மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று ஊரடங்கு அறிவிப்புக்குப்பின் இயங்காமல் உள்ளன. பஞ்சாலைகள் இலாபகரமாக இயங்கிவரும் இக்காலத்தில் 23க்கும் மேற்ப்பட்ட பஞ்சாலைகளை மூடிவைத்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களை பட்டினி போடும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்.

ஆலை மூடலுக்காக சட்டப்படி கொடுக்கப்படுகின்ற லே ஆப் சம்பளமும் முறையாக வழங்கப்படாமல் காலம் கடந்து வழங்கும் தன்மை உள்ளது. ஒன்றிய அரசு மேலும் காலம் தாழ்த்தாமல் என் டி சி ஆலைகளை இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தர்மபுரி மாவட்டம் சரவணா மில்லில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம், ஊதிய உயர்வு அடிப்படைச் சம்பளத்தில் உயர்வு அளிக்க வேண்டும். உயர்வு அளிக்கப்பட்ட ரூபாய் 3000 முழுமையாக அலவன்ஸ் வகைகளில் கொடுத்துள்ளதை ஆட்சேபித்த காரணத்திற்காக சிஐடியு சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. அதை எதிர்த்து தொழிற்தகராறு எழுப்பிய காரணத்திற்காக சங்க நிர்வாகி கண்ணதாசனை வன்மத்துடன் பேசி வருகின்ற நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. நிர்வாகம் தனது நிலையை பரிசீலனை செய்ய வேண்டும். பாரபட்சம் இல்லாமல் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அமுலாக்கப்பட வேண்டும். பஞ்சாலைகளில் பயிற்சியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.477 வழங்கே வேண்டும் என அரசாணை உள்ளது. பஞ்சாலைகளில் பணிபுரிகின்ற திறன் பெற்ற தொழிலாளர்களுக்கு ௹. 477க்கு குறைவில்லாத ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.