அரசியல் கட்சிகளில் முக்கியமான ஒரு தனிச் சிறப்பு கம்யூனிஸ்டுகள் செயல்படும் கட்சி அமைப்புக்களுக்கு உண்டு.காலம் காலமாக அடிமைப்பட்டு, சுரண்டப்பட்டு வந்துள்ள உழைக்கும் மக்களின் நலன்களை உறுதியாகப் பற்றி நிற்கும் தத்துவ அடித்தளம் கொண்டது கம்யூனிஸ்ட் கட்சி. உழைக்கும் வர்க்கங்கள் தங்கள் வாழ்நிலையை எவ்வாறு மாற்றி அமைத்துக் கொள்ள முடியும், எந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பன பற்றி தெளிவான பார்வை கொண்ட இயக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி விளங்குகிறது. அவ்வப்போது மக்களின் வாழ்நிலைகளில் சிறு சிறு மாற்றங்களையும்,சிறிய அளவிலான முன்னேற்றங்களையும் ஏற்படுத்த முயல்கின்ற இதர இயக்கங்களுக்கு இந்த தத்துவப் பார்வை இருக்க வாய்ப்பில்லை.
“வர்க்கக் கட்சி”
கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்தப் பார்வையை வடிவமைத்தது மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை. அந்த மகத்தான காவியம், முதலாளித்துவத்தைப் பற்றிய நுட்பமான ஆய்வை மட்டும் கொண்டிருக்கவில்லை; பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்க வேண்டிய மாற்றத்தை அது பேசுகிறது; ஒரு சமூகப் புரட்சியை நடத்திட அறைகூவல் விடுக்கிறது. அதற்கான செயல்திட்டம் கொண்ட முதல் ஆவணமாக கம்யூனிஸ்ட் அறிக்கை விளங்குகிறது. ஒவ்வொரு நாட்டின் கள நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் செயல்பாட்டு வியூகங்களையும், செயல்திட்டங்களையும் வடிவமைத்து முதலாளித்துவத்தை வீழ்த்தி, ஒரு மாற்று சமூகத்தைப் படைக்க அறிக்கை வழிகாட்டுகிறது. சமூகத்தை இயக்கிட பொருளுற்பத்தி தேவை.உற்பத்தியில் ஈடுபட்டு உழைப்பை செலுத்தி, செல்வங்களைப் படைப்பது உழைக்கும் வர்க்கங்கள்; ஆனால், உற்பத்திக் கருவிகள் மீது கார்ப்பரேட் பெருமுதலாளிகள், பெரு நிலவுடைமையாளர்கள் என உடைமை வர்க்கங்கள் தங்கள் கட்டுப்பாட்டை வைத்திருக்கிறன்றனர். உழைப்புக்கான பலன் கிடைத்திடாமல் உழைக்கும் மக்கள் மீதான சுரண்டல் கொடுமை நிகழ்ந்து வருகிறது.
உழைப்பைச் சுரண்டி ஆளும் வர்க்கங்கள் தங்கள் மூலதனத்தைப் பெருக்குவது தடையின்றி நடப்பதால் சமூக ஏற்றத்தாழ்வு மேலும் மேலும் பெருகி வருகிறது. இந்த நிலையை மாற்றி உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட அனைத்திலும் தங்கள் அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் நிலை நாட்டிட வேண்டும். இதற்கான புரட்சியை நிகழ்த்தும் வல்லமை கொண்டது பாட்டாளி வர்க்கம். பாட்டாளி வர்க்க விடுதலையை செயல்திட்டமாக கொண்டுள்ள கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. இதனால்தான் கம்யூனிஸ்டுகள் தாங்கள் செயல்படும் கட்சியை பாட்டாளிகளின் “வர்க்கக் கட்சி” என்று அழைப்பதில் பெருமை கொள்கின்றனர். இத்தகு மார்க்சிய அடிப்படைகளில் உறுதியாக நின்று தமிழக உழைக்கும் மக்களின் விடுதலையே மூச்சாகக் கொண்டு செயல்பட்டு வருகிற கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளங்குகிறது. பல்வேறு தரப்பு வர்க்கங்களின் உரிமைகளையும் கோரிக்கைகளையும் இடைவிடாது முழங்கி, போராட்டங்களை நடத்தி, தியாகங்களைச் செய்து வந்துள்ள கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
வர்க்க நிகழ்ச்சி நிரல்
தமிழகத்தின் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இதன் முக்கியமான முன்முயற்சியாக சுயமரியாதை -பொதுவுடைமை இயக்கம் விளங்கியது. இதன் முன்னோடிகளாக தந்தை பெரியார், மார்க்சிய அறிஞர் சிங்காரவேலர், தமிழகத்தில் பாட்டாளி வர்க்க இயக்கத்தை கட்டியமைத்த ப.ஜீவானந்தம்,பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் செயல்பட்டு வந்தனர்.சமதர்மப் பிரச்சாரத்தை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சென்றனர். 1931-ஆம் ஆண்டு சென்னையில் தந்தை பெரியார் முன்னின்று நடத்திய சுயமரியாதை மாநாட்டில் சிங்காரவேலர் சிறப்புரை நிகழ்த்தினார்.
அதில் அவர் குறிப்பிட்டார்:
“....சமதர்மமே,அதாவது மதமற்ற, சாதி வேற்றுமையற்ற, பொருளாதார வேற்றுமையற்ற தர்மமே நமது நாட்டையும் மற்ற நாடுகளையும் காப்பாற்றவல்ல இயக்கமாகும்.” இவ்வாறு தொடங்கிய பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த சிந்தனை அடுத்த சில ஆண்டுகளில் தீவிரம் கண்டது. மார்க்ஸ், லெனின் எழுத்துக்களையும் கம்யூனிச இயக்கம் பற்றிய ஏராளமான நூல்களையும் சுயமரியாதை இயக்கம் வெளியிட்டது. புரட்சி, பகுத்தறிவு, சமதர்மம், வெடிகுண்டு எனப் பல இதழ்கள் வெளிவந்தன. வர்க்க ஒடுக்குமுறை, சாதி, மத பிற்போக்குத்தனங்களை அம்பலப்படுத்தி ,உழைக்கும் வர்க்க விடுதலையைப் பேசுகிற பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. குடியரசு பத்திரிக்கையில் பொதுவுடமைத் தத்துவம் பற்றிய கட்டுரைகளும் சிங்காரவேலரின் கட்டுரைகளும் வெளிவந்தன. கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழியாக்கம் செய்து பெரியார் வெளியிட்டார். அன்று “தமிழ்நாட்டில் சமதர்ம வெள்ளம் பெருக்கெடுத்து “ஓடியதாக சாமி சிதம்பரனார் தனது “தந்தை பெரியார்” நூலில் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சாரம் பாட்டாளி வர்க்கத்தின் நலனை அன்றைய தமிழக நிகழ்ச்சி நிரலில் முதன்மைப்படுத்தியது. இந்த வர்க்க சிந்தனை தமிழக சிந்தனைப் பரப்பில் ஆழமாக இரண்டற கலந்தது. சுயமரியாதை இயக்கத்தின் காலம் முடிந்து, திராவிட இயக்கம் வலுப்பெற்று, திராவிட கட்சிகள் சார்பில் அடுத்தடுத்து ஆட்சிகள் வந்தபோதிலும் பாட்டாளி வர்க்க நலன் என்கிற நிகழ்ச்சி நிரலை புறந்தள்ள முடியவில்லை. திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் உழைக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சில நலத்திட்டங்களை விடாப்பிடியாக வழங்க வேண்டும் என்கிற அழுத்தம் தமிழகத்தில் நீடித்து வந்துள்ளது. இந்த பாட்டாளி வர்க்க நலன் என்கிற கருத்தாக்கம் இன்று வரை நீடித்து வருகிறது. உழைக்கும் வர்க்க நலன் என்பது தமிழக சித்தாந்த வெளியில் முக்கிய இடத்தைப் பெறுவதற்கு 1930-ஆம் ஆண்டுகளிலிருந்து கம்யூனிஸ்டுகள் நடத்தி வந்துள்ள வர்க்கப் போராட்டங்களும், புரட்சிகரப் பிரச்சாரங்களும் முக்கியப் பங்காற்றியுள்ளது.வரலாற்றை விருப்பு வெறுப்பின்றி ஆராய்ச்சி மேற்கொள்கிற எவரும் இந்த உண்மையை மறுக்க மாட்டார்கள்.
நான்காண்டு கால வர்க்கப் போராட்டங்கள்
மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாட்டில் கடந்த நான்காண்டு காலத்தில் நடைபெற்ற தொழிலாளிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், பெண்கள், மாணவர், இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் நடத்திய மாபெரும் போராட்டங்கள் பற்றிய ஆழமான பரிசீலனை நடைபெறவுள்ளது. கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்திய அசாதாரணமான சூழலில் கூட வலுவான இயக்கங்களையும், நிவாரணப் பணிகளையும் மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டது. இந்தப் போராட்டங்களின் படிப்பினைகளைப் உணர்ந்து, மேலும் மேலும் உழைக்கும் வர்க்கங்களை அணிதிரட்டுவதற்கான திட்டங்களை 23-வது மாநில மாநாடு உருவாக்கிட உள்ளது. சமூகத்தின் அனைத்துத் தரப்பட்ட மக்களின் மீதும் நவீன தாராளமயக் கொள்கைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதற்கெதிராக தொழிலாளி - விவசாயி வர்க்கங்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி இந்தப் போராட்டங்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்துள்ளது.
தமிழகத்தில் நகரமயம் தீவிரமடைந்து வருகிறது. நகரங்களில் வாழும் மக்கள் தொகையும் வெகு வேகமாக அதிகரித்து வருகின்ற சூழலில் கார்ப்பரேட் முதலாளித்துவம் நகரங்களை தங்களது மூலதனப் பெருக்கத்திற்கு வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர்.குடிசைவாழ் மக்கள்,நகர்ப்புற நடுத்தர மக்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி கண்மூடித்தனமாக சொத்து வரியை உயர்த்திய போது மார்க்சிஸ்ட் கட்சி இடைவிடாது போராட்டம் நடத்தியது. குப்பை வரி, குடிநீர் கட்டண உயர்வு என மக்களுக்கு அளிக்க வேண்டிய அனைத்து சேவைகளுக்கும் கட்டணக் கொள்ளைகள், அவற்றை தனியார்மயமாக்குவது போன்ற அனைத்தையும் எதிர்த்து, உழைக்கும் மக்களுக்கு பக்கபலமாக மார்க்சிஸ்ட் கட்சி இருந்து வந்துள்ளது. கிராமப்புறங்களில் ஊரக வேலை உறுதித் திட்டத்தை உருக்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்துப் போராடி வந்துள்ளது. கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிராமப்புறக் கிளைகள் மேற்கொண்ட இயக்கங்கள் கணக்கிலடங்காதவை.
வர்க்க உணர்வு
நவீன தாராளமயக் கொள்கைகள் சமூக, பொருளாதார, சித்தாந்த, பண்பாட்டுத் துறைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.இந்த தாக்கங்களை உணர்ந்து அதற்கேற்றவாறு வர்க்க இயக்கங்களை வலுப்பெறச் செய்வதற்கு ஓர் ஆய்வினை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொண்டது. கடந்த கால் நூற்றாண்டாக இந்திய ஆளும் வர்க்கம் திணித்து வந்துள்ள நவீன தாராளமயம் எனும் அழிவுப் பாதை மக்கள் வாழ்க்கையில் எவ்வித தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதே அந்த ஆய்வின் நோக்கம். விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் மற்றும் நகர்ப்புறங்களில் நவீன தாராளமயத்தின் விளைவுகளை ஆராய்ந்து, மூன்று ஆய்வறிக்கைகளை கட்சி உருவாக்கியது. இதனை தமிழக நிலைமைகளில் பொருத்தி தமிழக உழைக்கும் வர்க்கங்களைத் திரட்டுகிற கடமையை மார்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்ளும். 23வது மாநாடு இந்தப் பணிக்கு உரமூட்டுவதாக அமைந்திடும்.
நவீன முதலாளித்துவ சமூகத்தில் பாட்டாளி வர்க்கம்தான் புரட்சியை சாதிக்க வல்லது என்று மார்க்சியம் கண்டறிந்தது.கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்ட சூழலிலும் கூட மாற்றத்தை ஏற்படுத்த இந்த வர்க்கங்கள் ஏன் முன்வரவில்லை என்று பலர் கேள்வியெழுப்புகின்றனர். புரட்சிகர வர்க்க உணர்வு இந்த வர்க்கங்களிடம் வலுப்பெற வேண்டும் எனவும் இந்த உணர்வை ஏற்படுத்துவது கம்யூனிஸ்டுகளின் பணி என்பதையும் லெனின் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக வர்க்கங்களின் புரட்சிகர வர்க்க உணர்வை மேம்படுத்தி, அவர்களை அடிப்படை மாற்றத்தை நோக்கித் திரட்டும் கடமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல மடங்கு முனைப்புடன் மேற்கொள்ளும்.