tamilnadu

அதிகாரிக்கு அபராதம்: காவலர்களுக்கு டிஜிபி பாராட்டு

சென்னை,பிப்.3- வாகனத் தணிக்கையின்போது முகக்கவசம் அணியாமல் வந்த காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு அபராதம் விதித்த  காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக மெங்கும் காவல்துறை வாகனத் தணிக்கை செய்து முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. கடந்த 13 ஆம் தேதி, சென்னை அண்ணாநகர் காவல் நிலைய  எல்லையில் உதவி ஆய்வாளர் கேசவன், காவலர்கள் அம்சவல்லி  மற்றும் செல்வம் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது, அவ்வழியே முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காவலர்களுடன் வாக்குவாதம் செய்து கோபத்தை தூண்டும் வகையில் பேசியும் காவலர்கள் பொறுமை இழக்காமல் நிதானத்துடனும், சமயோஜிதத்துடணும் நடந்து கொண்டனர். அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரித்ததில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒரு காவல்  துணை கண்காணிப்பாளர் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரல் ஆனது. காவலர்கள் அந்த  சூழலை கையாண்ட விதத்தை பாராட்டும் விதமாக சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, டிஜிபி அலுவலகத்திற்கு  அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.