tamilnadu

img

மூன்றாண்டுகள் ஆகியும் பஞ்சாலைகள் திறக்கப்படவில்லை

கோயம்புத்தூர், ஏப்.20- என்டிசி பஞ்சாலைகளை மூன்றாண்டுகளாக திறக்காமலும், தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமலும் உள்ளதைக் கண்டித்து, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பஞ்சாலைகளின் வாயில்களில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய ஜவுளித்துறையின் கீழ் தமிழகத்தில் 7 பஞ்சாலைகள் செயல்படுகின்றன. இதில், கோவையில் ஐந்து என்டிசி பஞ்சாலைகளும், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் தலா ஒரு பஞ்சாலையும் இயங்கி வந்தன. இவற்றில், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 2020 மார்ச் 23 முதல் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி இந்த மில்கள் மூடப்பட்டன. தற்போது வரை மில்கள் திறக்கப்படவில்லை. அதிகாரிகளுக்கு முழு ஊதியம் அளித்து வந்த என்டிசி நிர்வாகம், தொழிலாளர்களுக்கு பாதி ஊதியமே அளித்து வந்தது.

அதையும் கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக நிறுத்தி விட்டது. இதன்காரணமாக தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஒன்றிய அரசின் இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து தொடர் போராட்டங்களை அனைத்து பஞ்சாலை தொழிற்சங்க கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக, என்டிசி பஞ்சாலைகள் முன்பு தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றாண்டுகளுக்கும் முழு சம்பளம் வழங்க வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும், முழு சம்பளம் வழங்கி பென்ஷன் குறைபாட்டை சரி செய்ய வேண்டும், மூன்றாண்டுகளுக்கும் போனஸ் மற்றும் இதர பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  கஞ்சி காய்ச்சும் போராட்டத்திற்கு எச்எம்எஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.எஸ்.ராஜாமணி தலைமை வகித்தார். இதில், சிஐடியு மில் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சி.பத்மநாபன், தலைவர் ஜான்சேவியர், ஏஐடியுசி மில் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.ஆறுமுகம், செயலாளர் சி.சிவசாமி, ஏடிபி செயலாளர் எம்.கோபால், ஐஎன்டியூசி துணை பொது செயலாளர் டி.ஆர்.பாலசுந்தரம், எம்எல்எப் தலைவர் மு.தியாகராஜன், அம்பேத்கர் யூனியன் பொதுச் செயலாளர் எம்.நீலமேகம், என்டிஎல்எஸ். பி.ரங்கசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர்.