அவளுக்கு யாரும்
இல்லாமல் போய்விட்டார்கள்
அதுவும் அவளது
கல்யாணத்தின் பொழுது !
தாலி ஏறும் முன் சுற்றிலும்
ஒருமுறை பார்த்துக் கொண்டாள் அம்மாவைப் போலவோ உடன்பிறந்த சகோதர சகோதரிகளைப் போலவோ
எவரும் தென்படுகிறார்களா என்று!
மிகச்சிறுமியாய் இருக்கையில் இறந்து போன அப்பாவின் முகத்தை சிரமத்துடன் நினைவு கூர்ந்து தோற்றுப் போனாள்!
அம்மா அடிக்கடி சொல்லி இருக்கிறாள்
அவளுக்கு அப்பாவின் முகச்சாடையாம்!
இப்பொழுது அவள் முகமே
அவளுக்கு தொலைந்து போனது போலிருந்தது!
அன்று கோவில் வாசலில்
அவளைப் போலவே நிறையப் பெண்களுக்கு திருமணம் நடந்தது.
எந்தப் பெண்ணுக்கும்
அப்பாவோ அம்மாவோ
சகோதரனோ சகோதரியோ இல்லாமல்
திருமணம் நடக்கவில்லை என்றே அவளுக்கு தோன்றியது.
பெரும் கேவலுடன் அவளுக்கு அழுகை வந்த பொழுது
அவன் தாலி கட்டி
முடித்திருந்தான்!
தாலி அணிவித்தவனின்
கங்கணம் கட்டிய கைகளின்
நீண்ட விரல்களுக்கு இடையே
அவளது வாழ்க்கை
மேடும் பள்ளமுமாகத் தெரிந்தது.
புகைப்படம் எடுப்பவர்
ஒருமுறை இருவரையும் சிரிக்கச் சொல்லி அழைத்தார்.
அவனும் தன் உதிர உறவுகளை தேடி ஏமாந்திருப்பான் போல..
அவள் முகம் பார்த்தவன்
இருவரும் ஏன் சிரிக்கக் கூடாது என்றான்!
வரத.இராஜமாணிக்கம், பழநி